உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனை செய்தியாளர் சந்திப்பின்போது டாரியா கலனியுக் என்ற உக்ரைன் பெண் பத்திரிகையாளர் ஒருவர் கண்ணீர் பொங்க சரமாரியாக கேள்வி கேட்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
அதில் இங்கிலாந்து உள்ளிட்ட நேட்டோ நாடுகள் ஏன் இன்னும் உக்ரைனுக்கு ஆதரவாக களமிறங்கவில்லை என அவர் உருக்கமாக கேள்வி எழுப்பியுள்ளார். அவர், ‘’உக்ரைனுக்கு ஆதரவாக நீங்கள் ஏன் செல்லவில்லை? ஏனெனில் அதற்கு நீங்கள் பயப்படுகிறீர்கள். 3ஆவது உலகப்போர் வந்துவிடுமோ என நேட்டோ அஞ்சுகிறது. ஆனால் அது ஏற்கெனவே தொடங்கிவிட்டது. உக்ரைனில் குழந்தைகள் குண்டு வீசி கொல்லப்படுகிறார்கள். எங்கள் குடும்பத்தினரும் சக பணியாளர்களும் அழுது கொண்டிருக்கிறோம். இதுதான் இப்போது நடந்துகொண்டுள்ளது’’ என்று கண்ணீர் மல்க பேசினார்.