உணவுப் பற்றாக்குறை |நரமாமிசத்தை சாப்பிட்ட ரஷ்ய வீரர்கள்.. உக்ரைன் குற்றச்சாட்டு!
உக்ரைன் போரின் ஆரம்பத்தில் ரஷ்ய வீரர்கள் கடுமையான விநியோகப் பிரச்னைகளை எதிர்கொண்டதாகக் கூறப்படுகிறது. சில சமயங்களில், அவர்களுக்குக் காலாவதியான உணவு வழங்கப்பட்டது அல்லது வாரக்கணக்கில் அடிப்படைப் பொருட்கள் இல்லாமல் தவித்துள்ளனர். குளிர்காலத்தில் தங்களுக்குத் தேவையான பொருட்கள் தீர்ந்துபோன பிறகு, ரஷ்ய வீரர்கள் நரமாமிசம் உண்டதாக உக்ரைன் குற்றச்சாட்டு வைத்துள்ளது.
’தி சண்டே டைம்ஸ்’ பத்திரிகையிடம் பேசிய உக்ரைனிய இராணுவ உளவுத்துறை அதிகாரிகள் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். இதுகுறித்த ஒலி மற்றும் ஒளிப்ப்ட ஆதாரங்கள் இருப்பதாகவும் உக்ரைன் வீரர்கள் கூறியுள்ளனர்.
ரஷ்யப் படை வீரர்கள் தங்கள் சக வீரர்களைக் கொன்று சாப்பிட்டது தொடர்பாக குறைந்தது ஐந்து சம்பவங்கள் நிகழ்ந்து உள்ளதாக உக்ரைனிய உளவுத்துறை கூறியுள்ளது. அத்தகைய ஒரு சம்பவம், நவம்பர் 2025-இல் நிகழ்ந்தது என்றும் 'குரோமோய்' என்ற புனைப்பெயர் கொண்ட ஒரு வீரர், டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் மைர்னோகிராட் அருகே, இரண்டு சக வீரர்களைக் கொன்றுவிட்டு, அவர்களில் ஒருவரின் காலை உண்ண முயன்றபோது பிடிபட்டதாக அந்த அறிக்கை கூறுகிறது.
எனினும், லண்டனில் உள்ள ரஷ்ய கூட்டமைப்பின் தூதரகம் இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது. "நீங்கள் விவரித்தவை, உக்ரேனிய இராணுவ உளவுத்துறையால் வழங்கப்பட்ட புனைவுகளாகும். அந்த அமைப்பின் செயல்பாடு, உண்மைகளைச் சேகரிப்பதல்ல, மாறாக பிரசாரத்தை உருவாக்குவதே ஆகும்" என்று அதன் செய்தித் தொடர்பாளர் 'தி சண்டே டைம்ஸ்' பத்திரிகையிடம் கூறியுள்ளார்.

