தூதர் நியமன விவகாரம் | இங்கிலாந்துக்கு சிக்கல்.. பிரதமராகும் முதல் முஸ்லிம் பெண்?
அமெரிக்காவின் மறைந்த நிதி ஆலோசகர் ஜெஃப்ரி எப்ஸ்டீனின் நெருங்கிய கூட்டாளியாக இருந்த பீட்டர் மண்டேல்சனை, அமெரிக்காவிற்கான பிரிட்டிஷ் தூதராக நியமித்து பின்னர் நீக்கியதன் மீதான சர்ச்சையைத் தொடர்ந்து, இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் நாட்டில் அதிக அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளார்.
அமெரிக்காவின் மறைந்த நிதி ஆலோசகர் ஜெஃப்ரி எப்ஸ்டீனின் நெருங்கிய கூட்டாளியாக இருந்த பீட்டர் மண்டேல்சனை, அமெரிக்காவிற்கான பிரிட்டிஷ் தூதராக நியமித்து பின்னர் நீக்கியதன் மீதான சர்ச்சையைத் தொடர்ந்து, இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் நாட்டில் அதிக அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளார். ஸ்டார்மரின் தலைமைத் தளபதியும் நெருங்கிய உதவியாளருமான மோர்கன் மெக்ஸ்வீனி, மண்டேல்சனின் நியமனத்தில் தனது பங்கை ராஜினாமா செய்ததன் மூலம் நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது. மேலும், பிரதமரின் தகவல் தொடர்புத் தலைவர் டிம் ஆலனும் வெளியேறியதைத் தொடர்ந்து இது, அழுத்தத்தைத் தந்துள்ளது.
இதன் மோதல்கள் இன்னும் தொடரும் நிலையில், ஸ்டார்மரின் பதவி கேள்விக்குறியாகி உள்ளது. அங்கு, அடுத்த வாரிசாக யார் வரக்கூடும் என்பது குறித்த ஊகங்கள் தொடங்கியுள்ளன. பிரபலமடைந்து வரும் பெயர்களில் உள்துறை செயலாளர் ஷபானா மஹ்மூத்தின் பெயரும் அடிபடுகிறது. ஒருவேளை, இவர் உயர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டால், மஹ்மூத் பாகிஸ்தானிய வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்தின் முதல் பிரதமராகவும், அந்தப் பதவியை வகிக்கும் அதன் முதல் முஸ்லிம் பெண்ணாகவும் வரலாறு படைப்பார். 2010 முதல் பர்மிங்காம் லேடிவுட்டின் எம்பியாக இருந்து வருகிறார் மஹ்மூத்.
அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், அரச குடும்பத்தினர் மற்றும் பிரபலங்கள் என உலகின் செல்வாக்குமிக்க மனிதர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன், 2019ஆம் ஆண்டில், சிறுமிகளைக் கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக அமெரிக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். தனது செல்வாக்கையும் பணத்தையும் பயன்படுத்தி சிறுமிகளைத் தவறாகப் பயன்படுத்தியதாக அவர்மீது குற்றம்சாட்டப்பட்டது. ஆனால், அவர் கைது செய்யப்பட்ட சில வாரங்களிலேயே, நியூயார்க் சிறையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இது தற்கொலை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டாலும், அவரது மரணம் உலகளவில் பல மர்மங்களையும் சர்ச்சைகளையும் கிளப்பியது. கடந்த பல ஆண்டுகளாக, அமெரிக்க புலனாய்வாளர்கள் எப்ஸ்டீன் தொடர்பான மின்னஞ்சல்கள், தொடர்புப் பட்டியல்கள், விமானப் பயணப் பதிவுகள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள் எனப் பெருமளவிலான தரவுகளைச் சேகரித்தனர். இவைதான் இப்போது, 'எப்ஸ்டீன் கோப்புகள்' என்று அழைக்கப்படுகின்றன. சமீபத்தில், அமெரிக்க நீதிமன்ற உத்தரவுப்படி, இந்த ஆவணங்களின் புதிய தொகுப்பு பொதுவெளியில் வெளியிடப்பட்டது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த செல்வாக்குமிக்க நபர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இது, உலகளவில் புயலைக் கிளப்பி வருகிறது.

