”பதவி விலகும் தேதியைச் சொல்லுங்க..” பிரிட்டன் பிரதமருக்கு எதிராக அமைச்சர்கள் போர்க்கொடி!
தனது பிரதமர் பதவியிலிருந்தும், தொழிற்கட்சி தலைமைப் பொறுப்பிலிருந்தும் பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் விலக வேண்டும் என்ற அழுத்தங்களும், அதற்கான உள்நாட்டு அரசியல் நெருக்கடிகளும் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
பிரிட்டனில் பொருளாதார மந்தநிலை, கொள்கை முடிவுகளில் ஏற்பட்ட சறுக்கல்கள் மற்றும் சில சர்ச்சைக்குரிய நியமனங்கள் காரணமாக கெய்ர் ஸ்டார்மரின் செல்வாக்கு மக்களிடமும், அவரது சொந்தக் கட்சியினரிடமும் வேகமாகச் சரிந்து வருகிறது. மேலும், பிரிட்டனில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி மற்றும் பிராந்தியத் தேர்தல்களில் ஆளும் தொழிற்கட்சி மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தது. குறிப்பாக 1999-க்குப் பிறகு முதல்முறையாக வேல்ஸ் பகுதியில் தொழிற்கட்சி ஆட்சியை இழந்தது. மேலும், 'மேக்கர்ஃபீல்டு' நாடாளுமன்ற இடைத்தேர்தல் முடிவும் ஸ்டார்மருக்குப் பலத்த அடியைத் தந்தது. இந்தத் தேர்தலில் ஸ்டார்மருக்குப் போட்டியாகக் கருதப்படும் முன்னணித் தலைவரும், கிரேட்டர் மான்செஸ்டரின் முன்னாள் மேயருமான ஆண்டி பர்னம் 55% வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்திற்குள் மீண்டும் நுழைந்துள்ளார்.
இந்த வெற்றியால், தொழிற்கட்சியின் அடுத்த தலைவராக ஆண்டி பர்னத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற குரல்கள் அக்கட்சிக்குள் தீவிரமடைந்துள்ளன. இதனால், கெய்ர் ஸ்டார்மர் பதவி விலக வேண்டும் என்கிற குரல்களும் வேகம்பிடித்துள்ளன. ஏற்கெனவே சில ஜூனியர் அமைச்சர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு ஸ்டார்மரை விலகக் கோரியுள்ளனர்.
இந்த நிலையில், ”கெய்ர் ஸ்டார்மர் பதவி விலகுவதற்கான கால அட்டவணையை உடனடியாக வெளியிட வேண்டும்” என்று அவரது அமைச்சரவை சகாக்களே வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர். போக்குவரத்துத் துறைச் செயலாளர் ஹெய்தி அலெக்சாண்டர் உட்பட மூத்த அமைச்சர்கள் பலரும் ஸ்டார்மர் கண்ணியமான முறையில் பதவியை அடுத்தவரிடம் ஒப்படைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். “ஸ்டார்மர் எப்போது பதவியை விட்டு விலக உத்தேசித்துள்ளார் என்பது குறித்து தெளிவுபடுத்தாவிட்டால், ஒரு தலைமைப் போட்டிக்கு வழிவகுக்கக்கூடும்” என முன்னாள் சுகாதார அமைச்சர் வெஸ் ஸ்ட்ரீட்டிங்கும் எச்சரித்துள்ளார்.
இத்தனை எதிர்ப்புகளையும் மீறி, பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், "நான் பதவி விலகப் போவதில்லை" என உறுதியாகத் தெரிவித்துள்ளார். இருப்பினும், தொழிற்கட்சியின் 90-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் அவருக்கு எதிராக உள்ளதால், வரும் வாரங்களில் அவர் தனது ராஜினாமா குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். தொழிலாளர் கட்சியின் விதிகளின்படி, அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 20% பேர் (தற்போது 81 எம்.பி.க்கள்) ஒரே ஒரு போட்டியாளருக்கு முறையாக ஆதரவளித்தால், தலைமைப் பதவிக்கான போட்டி தொடங்கப்படலாம்.

