அபுதாபி டூ புஜைரா | மணிக்கு 200 கி.மீ. வேகம்.. ஜூன் 30 முதல் UAE-இல் முதல் பயணியர் ரயில்!
ஐக்கிய அரபு அமீரகத்தின் போக்குவரத்து உள்கட்டமைப்பில் ஒரு வரலாற்று மைல்கல்லாக, அந்நாட்டின் முதலாவது தேசிய பயணியர் ரயில் சேவை ஜூன் 30 முதல் தொடங்கப்பட இருக்கிறது. இந்த அதிநவீன ரயில்கள் மணிக்கு அதிகபட்சமாக 200 கி.மீ வேகத்தில் இயங்கும் திறன் கொண்டவை. இந்த ரயில் சேவைமூலம், அபுதாபியில் இருந்து புஜைரா சென்றடைய வெறும் 1 மணி நேரம் 45 நிமிடங்கள் (105 நிமிடங்கள்) மட்டுமே ஆகும். இந்த வழித்தடத்தில் தினமும் காலை 8:19, மதியம் 1:53 மற்றும் மாலை 6:39 ஆகிய நேரங்களில் என மொத்தம் 3 சேவைகள் இயக்கப்படவுள்ளன. இதற்கான கட்டணம் 55 திர்ஹம் (இந்திய மதிப்பில் ரூ.1,250) முதல் தொடங்கும் நிலையில், அதற்கான முன்பதிவுகளும் எட்டிஹாட் ரயில் செயலி மற்றும் இணையதளம் வாயிலாகத் தொடங்கியுள்ளன.
எட்டிஹாட் ரயில் நிறுவனம் முதற்கட்டமாக 13 பயணியர் ரயில்களைக் கொண்ட கடற்படையைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு ரயிலும் ஒரே நேரத்தில் 400 பயணிகள் வரை ஏற்றிச் செல்ல முடியும்.
ரயிலினுள் வைஃபை வசதி, தனிநபர் சார்ஜிங் பாயிண்டுகள், சொகுசான இருக்கைகள், குடும்பத்தினருக்கான தனிப் பகுதிகள் மற்றும் உணவு வசதிகள் உள்ளிட்டவை செய்யப்பட்டுள்ளன. இந்த பயணியர் ரயில் திட்டம் நாடு முழுவதும் உள்ள 7 அமீரகங்களின் 11 முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் 900 கி.மீ தூரத்திற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அமீரகத்தின் 'Projects of the 50' என்ற தொலைநோக்குத் திட்டத்தின்கீழ், சாலை நெரிசலைக் குறைக்கவும், உள்நாட்டுப் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்தவும் இந்த பிரம்மாண்ட ரயில் சேவை கொண்டு வரப்பட்டுள்ளது.
அபுதாபியின் கிரவுன் பிரின்ஸ் ஷேக் கலீத் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான், அபுதாபியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 'முகமது பின் சயீத் சிட்டி' பயணியர் ரயில் நிலையத்தை அண்மையில் திறந்து வைத்து இந்தச் சேவையை முறைப்படி தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

