கொரோனா மனிதரால் உருவாக்கப்பட்டதா?: அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பினர் வெளியிட்ட அறிக்கை
கொரோனா வைரஸ் தொடர்பாக சீனாவும், அமெரிக்காவும் மாறிமாறி குற்றம்சாட்டி வரும் நிலையில் கொரோனா குறித்து அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்
அமெரிக்காவில் கொரோனா பெருந்தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 63 ஆயிரத்தைக் கடந்திருக்கும் நிலையில், வைரஸ் பற்றிய போதிய தகவல்களைச் சீனா பகிரவில்லை என அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். கொரோனாவை சீனாதான் உருவாக்கியது என்றும் அதற்கான ஆதாரம் உள்ளது என்றும் தெரிவித்து வருகிறார்.
மேலும்,கொரோனா எங்கிருந்து பரவியது என்பதைக் கண்டறிவதற்காக தங்களது விசாரணைக் குழுவை வுஹான் நகருக்குள் அனுமதிக்க வேண்டும் என்றும் ட்ரம்ப் தெரிவித்தார். ஆனால் சீனா மறுத்துவிட்டது. அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு ஆரம்பம் முதலே மறுப்பு தெரிவித்து வரும் சீனா, அமெரிக்க ராணுவம் தான் கொரோனாவை உருவாக்கி இருக்க வேண்டுமென பதில் கூறியது.
இது தொடர்பாக பேசிய சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர், எந்த நேரத்திலும் உலகின் எந்தவொரு நாட்டிலும் அந்த வைரஸ் தோன்றலாம் என்றும், எனவே இந்த விவகாரத்தில் சீனாவைக் குற்றம்சாட்ட வேண்டாம் என்றார். மேலும், வைரஸை சீனா உருவாக்கிப் பரப்பிவிடவில்லை என்பதை அமெரிக்கா உணர வேண்டும் .வைரஸ் பரவிய நாள் முதல் அது தொடர்பான தகவல்களை உலக நாடுகளிடம் வெளிப்படையாகப் கூறி வருகிறோம் என விளக்கம் அளித்தார்.
கொரோனா வைரஸ் தொடர்பாக சீனாவும், அமெரிக்காவும் மாறிமாறி குற்றம்சாட்டி வரும் நிலையில் கொரோனா குறித்து அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா விலங்குகளிடம் இருந்து பரவியதா அல்லது சீனாவில் ஏதேனும் ஆய்வகத்தில் இருந்து விபத்தின் விளைவாக வெளியேறியதா என்பதை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம் என தெரிவித்துள்ளது.