சிறை மீண்ட ராய்ட்டர்ஸ் நிருபர்களுக்கு புலிட்சர் விருது

சிறை மீண்ட ராய்ட்டர்ஸ் நிருபர்களுக்கு புலிட்சர் விருது
சிறை மீண்ட ராய்ட்டர்ஸ் நிருபர்களுக்கு புலிட்சர் விருது

மியான்மரில் ரோஹிங்கிய இஸ்‌லாமியர்களுக்கு எதிராக நடந்த இனப்படுகொலை தொடர்பாக செய்தியை சேகரித்ததற்காக சி‌றையில் அடைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்ட ராய்ட்டர்ஸ் செய்தியாளர்களுக்கு புலிட்சர் விருது வழங்கப்பட்டது.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் செய்தியாளர்களான வா லோன் (32), கியா சோவூ (28) ஆகிய இருவரும் மியான்மரில், ரோஹிங்கயா முஸ்லிம்களுக்கு எதிரான நடைபெற்ற அடக்குமுறைகள் குறித்தும், இனப்படுகொலை தொடர்பாகவும் புலனாய்வு செய்து செய்திகள் வெளியிட்டனர். ஆனால் செய்தியாளர்கள் இருவரும் மியான்மர் அரசின் ரகசியங்களை வெளியிட்டதாக குற்றம்சாட்டப்பட்டு, கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பும் வழங்கப்பட்டது. சிறைத்தண்டனையை ரத்து செய்யக்கோரி செய்தியாளர்கள் இருவரும் மேல்முறையீடு செய்தனர். 

ஆனால் அது நிராகரிக்கப்பட்டது.  செய்தியாளர்களின் மீதான குற்றச்சாட்டு உலக அரங்கில் எதிர்ப்பு கிளம்பியது.மேலும் இது பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கும் செயல் எனப் பலரும் குரல் கொடுத்தனர். இது குறித்து கருத்து தெரிவித்திருந்த மியான்மருக்கான ஐநா தூதர், செய்தியாளர்கள் விடுதலைக்கு அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனகோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் மியான்மரின் பாரம்பரிய புத்தாண்டை அடுத்து பொது மன்னிப்புக்கோரி 1000திற்கும் அதிகமான கைதிகளை விடுதலை செய்ய அதிபர் வின் மிண்ட் உத்தரவிட்டார். 

அந்த உத்தரவின் பேரில் செய்தியாளர்கள் வா லோன் , கியா சோவூ ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். கிட்டத்தட்ட 500 நாட்களுக்கு மேலான சிறைவாசத்திற்குப் பிறகு அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.  இந்தச் சூழலில் இவர்களுக்கு ஏற்கெனவே புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் நியூயார்க்கில் நடைபெற்ற புலிட்சர் விருது நிகழ்ச்சியில் அவர்கள் இருவருக்கும் விருது வழங்கப்பட்டது. இந்த விருது தங்களுக்கு கி‌டைத்த அங்கீகாரம் எ‌னச் செய்தியாளர்கள் இருவரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com