வர்த்தக சலுகைகளை அமெரிக்கா ரத்து செய்தது வருந்ததக்கது - இந்தியா
இந்தியாவுக்கு வழங்கப்பட்டு வந்த வர்த்தக சலுகைகளை ரத்து செய்யும் அமெரிக்காவின் முடிவு வருத்தம் தருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கு தரப்பட்டு வரும் 39 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சிறப்பு வர்த்தக சலுகைகளை ஜூன் 5ம் தேதி முதல் ரத்து செய்யப்படும் என டிரம்ப் நிர்வாகம் தெரிவித்திருந்தது. வளரும் நாடு என்ற பிரிவின் கீழ் பல்வேறு இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா இறக்குமதி வரி விதிக்காமல் சலுகை அளித்து வந்தது.
இந்தச் சூழலில் தாங்கள் சலுகைகள் அளிப்பது போன்று அமெரிக்க பொருட்களை தடைகள் இல்லாமல் தாராளமாக ஏற்றுமதி செய்யும் சூழலை இந்தியா ஏற்படுத்தி தர வேண்டும் என டிரம்ப் நிர்வாகம் கேட்டுக் கொண்டிருந்தது. இதற்கு இந்தியா அளித்த சில தீர்வுகளை ஏற்றுக்கொள்ளாத அமெரிக்கா வர்த்தக சலுகைகளை ரத்து செய்வதாக அறிவித்தது.
இந்நிலையில் இந்தியாவுக்கு வழங்கப்பட்டு வந்த வர்த்தக சலுகைகளை ரத்து செய்யும் அமெரிக்காவின் முடிவு வருத்தம் தருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் பரஸ்பர வர்த்தக நலன்கள் பராமரிக்கப்பட வேண்டும் என்ற அமெரிக்காவின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் சில தீர்வுகளை தாங்கள் அளித்திருந்ததாகவும் ஆனால் அவற்றை ஏற்காமல் சலுகைகளை ரத்து செய்யும் முடிவை அமெரிக்கா எடுத்துள்ளதாகவும் மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் அமெரிக்காவின் முடிவுகள் இந்தியாவுக்கு இரட்டை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது. ஏற்கனவே ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் வாங்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சிறப்பு வர்த்தக சலுகைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

