அணு ஆயுத பிரச்னைக்கு தீர்வு காணப்படும் - ட்ரம்ப்
அணு ஆயுத ஒழிப்பு விவகாரத்தில் வடகொரியாவுடன் அமெரிக்கா இணைந்து செயல்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும்,வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் சிங்கப்பூரின் செண்டோசா தீவில் உள்ள கேபெல்லா ஹோட்டலில் இன்று சந்தித்தனர். உலகமே உற்றுநோக்கிய இந்த வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பில் ட்ரம்பும், கிம் ஜாங் உன்னும் ஒருவரையொருவர் கைக்குலுக்கி வரவேற்றனர். இதனை தொடர்ந்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 48 நிமிடங்கள் இந்த பேச்சுவார்த்தை நீடித்தது. பின்னர் இருவரும் வெளியே வந்து செய்தியாளர்களை பார்த்து கை அசைத்தனர்.அப்போது வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடனான பேச்சுவார்த்தை மிகவும் நன்றாக அமைந்தது என்று ட்ரம்ப் கூறினார். இந்த சந்திப்பு மிகப்பெரிய சிக்கலுக்கு தீர்வு காண வழிவகுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இப்பேச்சுவார்த்தை சமாதானத்திற்கு வழிவகுக்கும் என நம்புவதாக கிம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தொடர்ந்து இரு நாட்டு தலைவர்களும் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.