“பின்லேடன் மகன் கொல்லப்பட்டது உறுதி” - ட்ரம்ப் ஒப்புதல்

“பின்லேடன் மகன் கொல்லப்பட்டது உறுதி” - ட்ரம்ப் ஒப்புதல்
“பின்லேடன் மகன் கொல்லப்பட்டது உறுதி” - ட்ரம்ப் ஒப்புதல்

அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் மகன் ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டதை அதிபர் டொனால்டு ட்ரம்ப் உறுதி செய்துள்ளார்.

பிரபல பயங்கரவாத அமைப்பான அல் கொய்தாவின் தலைவர் ஒசாமா பின்லேடன். அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல் உட்பட பல்வேறு பயங்கரவாத செயலில் ஈடுபட்டுள்ள பின்லேடனை அமெரிக்க கடற்படை சுட்டுக்கொன்றது. 2011 ஆம் ஆண்டு, பாகிஸ்தானின் அபோடாபாத்தில் அவர் கொல்லப் பட்டார். அவருக்குப் பிறகு அந்தப் பயங்கரவாத அமைப்பை, அவர் மகன் ஹம்சா பின்லேடன் வழி நடத்துவதாகக் கூறப்பட்டது. 

அத்தகைய சூழலில், ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டு விட்டதாக கடந்த மாதம் தகவல் வெளியானது. பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க உயரதிகாரிகள் இந்தத் தகவலை தெரிவித்ததாக செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் எப்போது, எங்கு கொல்லப்பட்டார் என்ற விவரமும் இதில் அமெரிக்காவுக்கு தொடர்பு இருக்கிறதா என்ற தகவல்களை அவர்கள் தெரிவிக்கவில்லை. அமெரிக்க அதிபர் டிரம்பிடம் இது உண்மைதானா என்று கேட்டதற்கு, ‘இதுகுறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை’ என்று கூறிவிட்டார். 

இந்நிலையில், ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டதை அதிபர் டொனால்டு ட்ரம்ப் உறுதி செய்துள்ளார். ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் பகுதிகளில் நடத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை மூலம் அவர் கொல்லப்பட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், பல்வேறு பயங்கரவாத குழுக்களுடன் ஹம்சா தொடர்பில் இருந்துள்ளார். அவரது இழப்பு அல்-கொய்தா அமைப்பிற்கு பின்னடைவை ஏற்படுத்துமென்று தெரிவித்தார். இருப்பினும், ஹம்சா எங்கு கொல்லப்பட்டார் என்ற தகவலை அவர் தெரிவிக்கவில்லை. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com