செல்போனுக்கு ‘தடா’... ஜாலியாக பேசினால் பீட்சா இலவசம்
செல்போனை அணைத்துவிட்டு சாப்பிடுபவர்களுக்கு அமெரிக்க உணவகம் ஒன்று பீட்சாவை இலவசமாக வழங்குகிறது.
இப்போதெல்லாம் ‘கெட் டூ கெதர்’ வைத்தால் கூட நண்பர்கள் அவ்வளவாக பேசிக் கொள்வதில்லை. கூட்டத்தில் ஒரு ஆளாக இருந்து கொண்டு அனைவரும் செல்போனில் மூழ்கிக் கிடக்கின்றனர். செல்போனில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெரிய வேலை இல்லை என்றாலும் கூட அதனை நிமிடத்திற்கு ஒரு முறை எடுத்து பார்த்தால்தான் நிம்மதி பெறுவாகிறார்கள். பலர் சாப்பிடும் நேரங்களில் கூட செல்போனை ஒதுக்கிவைத்து விட்டு சாப்பிடுவதில்லை. ஒரு கையில் சாப்பாடு என்றால் மறுகையில் செல்போன் என, செல்போன் அடிமையாக பலர் மாறியுள்ளனர்.
இந்நிலையில் செல்போனை அணைத்துவிட்டு சாப்பிடுபவர்களுக்கு அமெரிக்க உணவகம் ஒன்று பீட்சாவை இலவசமாக வழங்குகிறது. குறைந்தது நான்கு பேர் உணவகத்திற்கு செல்லும்போது அவர்கள் அனைவரும் போனை அங்குள்ள லாக்கரில் வைத்து விட்டு, கைகளில் செல்போன் இல்லாமல் சாப்பிட தயாரானால் அவர்களுக்கு இலவசமாக பீட்சா வழங்கப்படுகிறது. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள உணவகம் ஒன்றுதான் இந்தச் சேவையை வழங்குகிறது.
இதுகுறித்து உணவகம் தரப்பில் அதிகாரிகள் கூறும்போது, “ குடும்பத்தினர், நண்பர்கள் என எல்லோரும் ஒன்றாக வரும்போது செல்போனையே நோண்டாமல் நிம்மதியாக சாப்பிட வேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணம். அவர்கள், அவர்களுக்குள் நிறைய பேசிக்கொள்ள வேண்டும். அதற்காகதான் இந்த முறையை கையாள்கிறோம்” எனத் தெரிவித்தனர்.