ஒலிம்பிக் போட்டிகளில் ரோபோக்கள்: அசத்தல் திட்டத்தில் ஜப்பான்

ஒலிம்பிக் போட்டிகளில் ரோபோக்கள்: அசத்தல் திட்டத்தில் ஜப்பான்
ஒலிம்பிக் போட்டிகளில் ரோபோக்கள்: அசத்தல் திட்டத்தில் ஜப்பான்

ஜப்பானில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

அடுத்தாண்டு ஜூலை மாதம் 24 ஆம் தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகளும், அதற்கு அடுத்த மாதம் பாராலிம்பிக் போட்டிகளும் நடைபெறவுள்ளன. தங்களது நாடு தொழில்நுட்பத்தில் எந்த அளவுக்கு வளர்ந்துள்ளது என்பதை ‌உலகிற்கு பறைசாற்ற, வரும் ஒலிம்பிக் போட்டிகளை பயன்படுத்திக் கொள்ள ஜப்பான் திட்டமிட்டுள்‌ளது. 

அதற்கே‌ற்ப செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோக்களை ஜப்பான் களமிறக்க உள்ளது. பார்வையாளர்களை வரவேற்பது, போட்டிகளுக்கும், போட்டியாளர்களுக்கும் தேவையான பொருட்களைக் கொண்டு செல்வது வரை அனைத்து வேலைகளையும் இந்த செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் செய்யும். மினியேச்சர் ரிமோட் கண்ட்ரோல்ட் கார்கள், செயற்கை நுண்ணறிவுடன் தானாக ஓட்டிச்செல்லும் ரோபோ கார்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் ரோபோ, மின்சார வாகனங்கள் என அனைத்திலும் ரோபோ தொழில்நுட்பத்தை புகுத்தியுள்ளனர்.

அண்மையில் 2020 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கான அதிகாரப்பூர்வ சின்னம் வெளியிடப்பட்டது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் அதிகாரப்பூர்வ சின்னத்தை ஜப்பானின் கவர்னர் யூரிகோ, ஒலிம்பிக் அதிகாரப்பூர்வ ஏற்பாட்டுக்குழு தலைவர் யோசிரோ மோரி ஆகியோர் அறிமுகம் செய்து வைத்தனர். நீலம் மற்றும் இளஞ்சிவப்பு ஆகிய இரண்டு நிறங்களில் உள்ள குட்டி பொம்மைதான் அந்தச் சின்னமா‌கும். இதில் மிரய்டோவா என பெயரிடப்பட்டுள்ள நீல நிற சின்னம் ஒலிம்பிக் தொடருக்கும், சொமய்ட்டி என பெயரிடப்பட்டுள்ள இளஞ்சிகப்பு நிற சின்னம் பாராலிம்பிக் தொடருக்கும் பயன்படுத்தப்பட உள்ளன.

தற்போது மிரய்டோவா, சொமய்ட்டி ஆகியவற்றின் உருவத்திலேயே செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மிரய்டோவா, சொமய்ட்டி ரோபோக்கள் குழந்தைகளுடன் உரையாடவும், விளையாட்டுகளின் சிறப்புகளை பற்றி எடுத்துரைக்கவும் பயன்படுத்தப்படுகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com