உணவிலிருந்து சிமென்ட்.. நீங்க நம்பலனாலும் அதான் நெசம்.. ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் அசத்தல்!

உணவிலிருந்து சிமென்ட்.. நீங்க நம்பலனாலும் அதான் நெசம்.. ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் அசத்தல்!
உணவிலிருந்து சிமென்ட்.. நீங்க நம்பலனாலும் அதான் நெசம்.. ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் அசத்தல்!

வீணாக்கப்படும் உணவுக் கழிவுகளில் இருந்து கட்டுமானத்திற்கு தேவையான சிமென்ட் தயாரிக்கப்பட்டுள்ளது என்றுக் கூறினால் நம்ப முடிகிறதா?

‘நீங்க நம்பலனாலும் அதுதான் நெசம்’

ஆம். ஜப்பானின் டோக்கியோ பல்கலைக்கழகத்தின் தொழில்துறை அறிவியல் ஆராய்ச்சியாளர்களான கோட்டா மச்சிடா, யுயா சகாய் ஆகிய இருவரும் இணைந்து வீணாகும் உணவுக்கழிவுகளை கொண்டு கட்டுமானப் பயன்பாட்டிற்கான சிமென்ட்டை தயாரித்திருக்கிறார்கள்.

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத வகையில் உணவு பொருட்களில் இருந்து முற்றிலும் சிமென்ட் தயாரித்திருப்பது உலகிலேயே இதுவே முதல் முறையாகும். இந்த வகை சிமென்ட் வழக்கமாக பயன்படுத்தப்படும் கான்க்ரீட்டை விட நான்கு மடங்கு அதிகம் என மச்சிடாவும், சகாயும் கூறுகிறார்கள்.

உணவுக் கழிவுகள் அழுகி, சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் மீத்தேன் போன்ற வாயுக்களாக வெளியேறி, அதனால் ஏற்படும் புவி வெப்பமயமாதல், இந்த கண்டுபிடிப்பின் மூலம் குறையும் என நம்புவதாக ஆராய்ச்சியாளர்கள் மச்சிடா, சகாய் தெரிவித்துள்ளனர்.

உலகின் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தில் 8 சதவிகிதம் சிமென்ட் உற்பத்தியால் ஆனது என இங்கிலாந்தின் சாதம் ஹவுஸ் என்ற சிந்தனைக் குழு தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டிய டோக்கியோ பல்கலைக்கழக தொழில்துறை அறிவியலின் இணை பேராசிரியரான சகாய், வழக்கமாக பயன்படுத்தும் சிமென்ட் அடிப்படையிலான கான்க்ரீட்டுக்கு மாற்றாக நிலையான திறன் கொண்ட பொருட்களை ஆராய்ச்சி செய்தபோதுதான் இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கினோம் என்றார்.

முதலில் மரத்துகள்களை பொடியாக்கி அதனை சுருக்கி, பின்னர் உலர்த்துகள், தெளித்தல் போன்ற செயல்முறைகளை சந்தையில் கிடைக்கும் கலவைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அந்தப் பொருட்கள் ஒட்டிக்கொள்ள பிளாஸ்டிக்குகள் தேவைப்பட்டன.

பல மாத தோல்விகளுக்கு பிறகு உணவுக்கழிவுகளை கொண்டு அதன் வெப்பநிலை மற்றும் அழுத்தத்தை சரி செய்ததன் மூலம் சிமென்ட்டை பிணைக்க முடியும் என்பதை கண்டறிந்தோம்.

ஒவ்வொரு வகை உணவுக் கழிவுகளுக்கும் வெவ்வேறு வெப்பநிலை மற்றும் அழுத்த அளவுகள் தேவைப்பட்டதாகவும், அதனை சீராக்கும் பணி கடினமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ள அவர்கள், தேயிலை இலைகள், ஆரஞ்சு மற்றும் வெங்காயத் தோல்கள், காபி கொட்டைகள், சீன முட்டைக்கோஸ் போன்றவற்றை பயன்படுத்தி வெற்றிகரமாக உணவு சிமென்ட்டை தயாரித்ததாக தெரிவித்துள்ளனர்.

சிமென்ட்டில் நீர் புகாமல் இருக்கவும், அதனை கொறித்திண்ணிகள் உள்ளிட்ட பிற பூச்சியினங்கள் உண்ணாமல் பாதுகாக்க, அதன் மேல் ஜப்பானிய அரக்கு பூசலாம் என அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

கோட்டா மச்சிடா Fabula Inc என்ற நிறுவனத்தை தொடங்கினார். அவரது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து மற்ற நிறுவனங்களுடன் இணைந்து உணவுக் கழிவுகளில் இருந்து உருவாக்கப்பட்ட சிமென்ட்டை கொண்டு கட்லரிகள், அறைகலன்களை தயாரிக்கும் வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார்களாம். அவ்வாறு தயாரிக்கப்படும் பொருட்களை அமேசான் மூலமும் வாங்கும் வகையில் திட்டமிட்டு செயல்பட்டு கொண்டிருக்கிறார்களாம்.

முன்னதாக, உலகளவில் உணவு பொருட்களை வீணாக்கப்படுவது மிகப்பெரிய பிரச்னையாக இருந்து வருகிறது. குறிப்பாக ஜப்பானில் மட்டுமே கடந்த 2019ம் ஆண்டு 5.7 மில்லியன் டன் உணவுக் கழிவுகள் உற்பத்தியாகியிருக்கிறது. அதனை 2030ம் ஆண்டுக்குள் 2.7 மில்லியன் டன்களை குறைக்க அந்த நாட்டு அரசாங்கம் இலக்கு வைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com