'கீச்சு கீச் என்றது கிட்ட வா என்றது..' மீண்டும் கேட்போமா சிட்டுக்குருவிகளின் கீச்சுகளை?

'கீச்சு கீச் என்றது கிட்ட வா என்றது..' மீண்டும் கேட்போமா சிட்டுக்குருவிகளின் கீச்சுகளை?
'கீச்சு கீச் என்றது கிட்ட வா என்றது..' மீண்டும் கேட்போமா சிட்டுக்குருவிகளின் கீச்சுகளை?

அழிவின் விளிம்பில் இருக்கும் சிட்டுக்குருவிகள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அவற்றை பாதுகாக்கவும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20 அன்று “உலக சிட்டுக்குருவி தினம்” கடைபிடிக்கப்படுகிறது.

குழந்தைப் பருவ நிகழ்வுகளை நாம் நினைத்துப்ப்பார்க்கும் போதெல்லாம் அதில் தவறாமல் கேட்கும் ஒலிகளில் ஒன்று சிட்டுக்குருவிகளின் “கீச்.. கீச்”. குழந்தைப் பருவத்தில் நமது வீடுகளுக்கு அழையா விருந்தாளியாக ஜன்னல்களில் வந்தமர்ந்து இலவச “கீச்... கீச்..” ஒலிச் சேவையை சிட்டுக்குருவிகள் வழங்கிக் கொண்டிருக்கும். அப்படி உங்கள் வீடுகளுக்கு சிட்டுக்குருவிகள் வரவில்லையெனில், அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில், தெருக்களில், பேருந்து நிலையங்களில், ரயில் நிலையங்களில், மின்கம்பிகளில் என ஏதாவது ஒரு இடத்தில் அமர்ந்து கீச்சிக் கொண்டிருக்கும். நீங்களும் மெல்லிய புன்னகையோடு அதை ரசித்து நகர்ந்திருப்பீர்கள்.

கீழே சிதறிக் கிடக்கும் உணவு தானியங்கள் மற்றும் சிறு புழுக்கள் இவ்வளவு தான் சிட்டுக்குருவிகளின் உணவு. நம்மில் பலருக்கு குழந்தைப் பருவத்தில் பல அற்புதமான நினைவுகளில் அங்கம் வகித்த சிட்டுக்குருவிகளை கடைசியாக எப்போது பார்த்தீர்கள்? நினைவிருக்கிறதா? ஆம். அந்த கீச் குரலை உடைய சிட்டுக்குருவிகளை இப்போது காண்பது அரிதாகி விட்டது. எங்காவது எப்போதாவது ஒன்றிரண்டு குருவிகள் தென்படுவது கூட அரிதாகிப் போய் விட்டது. துரதிர்ஷ்டவசமாக, இந்த சிட்டுக்குருவிகள் வேகமாக அழிந்து வருகின்றன. நகரமயமாக்கல், அதிக மாசு, புவி வெப்பமடைதல் மற்றும் சுற்றுச்சூழல் வளங்களின் இழப்பு போன்ற காரணங்களால் சிட்டுக்குருவிகள் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அழிவின் விளிம்பிற்கு சென்று கொண்டிருக்கும் சிட்டுக்குருவிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த மார்ச் 20 ஆம் தேதியான இன்று ஒவ்வோரு ஆண்டும் “உலக சிட்டுக்குருவிகள் தினம்” கடைபிடிக்கப்படுகிறது. Nature Forever Society of India மற்றும் Eco-Sys Action Foundation of France ஆகிய இரு அமைப்புகளும் உலக சிட்டுக்குருவி தினம் கொண்டாடப்படுவதற்கான யோசனையை முன்வைத்தன. சிட்டுக்குருவியின் பாதுகாப்பைப் பற்றிய செய்தியைப் பரப்புவதற்காக ஒரு நாளை ஒதுக்க வேண்டும் என்ற கோர்க்கை வைத்தன. Nature Forever Society of India உலக சிட்டுக்குருவி தினம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பிரத்யேக இணையதளத்தை உருவாக்கியுள்ளது. இந்த இணையதளத்தில் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு வகையான சிட்டுக்குருவிகள் பற்றிய படங்கள் மற்றும் தகவல்களின் பெரிய தொகுப்பு உள்ளது.

முதல் உலக சிட்டுக்குருவி தினம் 2010 இல் ஏற்பாடு செய்யப்பட்டது. "நான் சிட்டுக்குருவிகளை விரும்புகிறேன்" (I Love sparrows) என்பது இந்தாண்டுக்கான உலக சிட்டுக்குருவி தினத்தின் கருப்பொருள். மனிதனுக்கும் சிட்டுக்குருவிகளுக்கு இடையான தொடர்புகளின் முக்கியத்துவத்தை மக்களிடம் எடுத்துச் செல்வதே இதன் நோக்கம். சிட்டுக்குருவிகள் மீது ஆர்வம் கொண்ட நபர்களை ஒன்றிணைத்து அவற்றின் அழகைப் பாராட்டுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. உலக சிட்டுக்குருவிகள் தினத்தின் நோக்கம் ஒருநாள் நிகழ்வை கௌரவிப்பது மட்டுமல்லாமல், சிட்டுக்குருவி பாதுகாப்பு மற்றும் நகர்ப்புற பல்லுயிர் பெருக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்கான ஒரு தளமாகவும் பயன்படுத்தப்படுகிறது. பெயரளவு கொண்டாட்டங்கள், விழிப்புணர்வு என்பதோடு மட்டும் நின்று விடாமல் தனிமனிதனாக, சமூகமாக நாம் எடுக்கும் முயற்சிகள்தான் மீண்டும் “கீச்... கீச்” ஒலிகளுக்கு உரிமையாளரான சிட்டுக்குருவிகளை அழிவிலிருந்து காப்பாற்ற இயலும் என்பது நிதர்சனம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com