கடன் தொல்லை: பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் முகத்தையே மாற்றிய பெண்
சீனாவில் கடன் தொல்லையில் இருந்து தப்பிக்க பெண் ஒருவர் முகம் மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
சீனாவின் உகான் நகரத்தைச் சேர்ந்த ஜூ நஜுவான் என்ற 59 வயது பெண், கடன் தொல்லையில் இருந்து தப்பிக்க முகம் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு, வயதான தோற்றத்தில் இருந்து இளம்பெண் தோற்றத்திற்கு மாறியுள்ளார். ஆனாலும் போலீஸார் அவரை கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், “ஜூ நஜுவான் தனது சொந்த காரணங்களுக்காக 3.7 மில்லியன் டாலர் கடனாக பெற்றுள்ளார். இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் கடனை திருப்பி தரும்படி உத்தரவிட்டது. இதை அடுத்து அவர் தலைமறைவாகியுள்ளார். அதன் பின்னர் அவர் முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார். அவர் ஏற்கனவே அளித்த போட்டோவில் இருப்பதை விட இப்போது மிகவும் இளமையாக 30 வயது தோற்றத்தில் காட்சியளிக்கிறார்” எனத் தெரிவித்தார்.
மேலும், ஜூ நஜுவான் மற்றவர்களின் அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி ரயிலில் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் செய்துள்ளார். அறுவை சிகிச்சைக்காக, கடன் அட்டைகள் மூலம் மீண்டும் கடன் பெற்றிருப்பதாகவும், அந்த தொகையையும் செலுத்தவில்லை என்றும் போலீஸ் அதிகாரி தெரிவித்தார். நாடு முழுவதும் இதுபோன்று கடன் தொல்லையில் இருந்து தப்பிக்க பல்வேறு வழிமுறைகளை கையாள்கின்றனர். ‘கிரிடிட் சொசைட்டி’ என்ற முறையை அறிமுகப்படுத்திய பிறகுதான் இது போன்ற தவறுகள் நடைபெறுவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.