\
The story behind ‘Dust Lady’
‘Dust Lady’ Marcy BordersAI

உலகையே உலுக்கிய ‘Dust Lady’ புகைப்படம்! 9/11 தாக்குதலுக்குப் பின் 'அந்த' பெண்ணுக்கு நடந்தது என்ன?

9/11 தாக்குதல் நடந்து 25 ஆண்டுகள் கடந்துவிட்டாலும், மார்சியின் அந்தப் புகைப்படம் மட்டும் இன்னும் அந்த நாளின் துயரத்தையும், அதில் உயிர் தப்பியவர்கள் எதிர்கொண்ட சொல்ல முடியாத வலியையும் உலகுக்கு நினைவூட்டிக்கொண்டு தான் இருக்கிறது.
Published on

செய்தியாளர் : ஐடா அருட்செல்வி

25 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த 9/11 தாக்குதல் அமெரிக்காவை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலகையும் உலுக்கியது. அந்தத் தாக்குதலை நினைவுபடுத்தும் பல புகைப்படங்களில், இன்றும் மனதை விட்டு நீங்காத ஒன்று ‘Dust Lady’ என அழைக்கப்படும் புகைப்படம். ஒரு புகைப்படத்துக்கு பின்னால் இவ்வளவு வலி நிறைந்த உண்மை கதை இருக்க முடியுமா? யார் இந்த ‘Dust Lady’? அவருக்கு என்ன நடந்தது ? விரிவாக பார்க்கலாம்.

2001-ல் உலக வர்த்தக மையத்தின் வடக்கு கோபுரத்தில் விமானம் மோதியபோது, தூசி மற்றும் இடிபாடுகளால் முழுவதும் மூடப்பட்ட நிலையில் இளம் பெண் ஒருவர் தப்பியோடும் காட்சி தான் ‘Dust Lady’ புகைப்படம். ஒரு செய்தி நிறுவனத்துக்காக புகைப்படக் கலைஞர் ஸ்டான் ஹோண்டா அந்தப் புகைப்படத்தை எடுத்தார்.

மார்சி போர்டர்ஸ் என்பவர் தான் அந்தப் பெண். அப்போது அவருக்கு 28 வயது. Bank of America-வில் வேலைக்குச் சேர்ந்து ஒரு மாதம்தான் ஆகியிருந்தது. விமானம் மோதியதும் கட்டடம் பயங்கரமாக குலுங்க தொடங்கியதாக கூறப்படுகிறது. அவரது முதலாளி அங்கேயே இருக்கச் சொன்னாலும், மார்சி படிக்கட்டுகள் வழியாக தப்பிச் சென்றார். அப்போது அருகிலிருந்த கட்டடத்துக்கு அவர் வந்தபோது ஹோண்டா அவரைப் புகைப்படம் எடுத்தார்.

‘Dust Lady’ Marcy Borders
‘Dust Lady’ Marcy BordersAI

அந்தப் புகைப்படம் உலகம் முழுவதும் பிரபலமானது. எனினும், மார்சியை அந்த அதிர்ச்சி சம்பவம் மனதளவில் பாதித்தது.

9/11 சம்பவத்துக்குப் பிறகு அவருக்கு தொடர்ந்து கனவுகள் வந்தன. மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட அவர் நாளடைவில் போதைப் பழக்கம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கும் உள்ளானார். வீட்டை விட்டு வெளியே வரவே அஞ்சினார். தனது உடலில் படிந்த தூசி நுரையீரலுக்குள் சென்று, ஒருநாள் தனக்கு நோய் ஏற்படும் என்ற பயமும் அவரை வாட்டியது.

மார்சி-க்கு இருந்த பிரச்சனைகளின் காரணமாக அவருடைய குழந்தைகள் அவரிடம் இருந்து பிரிக்கப்பட்டிருந்தனர்; மருத்துவ சிகிச்சை பெற்று குணமடைந்த பிறகு மீண்டும் குழந்தைகளை தானே பராமரிக்கும் உரிமையைப் பெற்றார். ஆனால், 2014-ல் அவருக்கு வயிற்றுப் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. உலக வர்த்தக மைய இடிபாடுகளில் ஏற்பட்ட ரசாயன மாசுபாட்டுக்கு தான் ஆளானதே நோய்க்குக் காரணமாக இருக்கலாம் என அவர் கூறினார். இந்தநிலையில், 2015 ஆகஸ்ட் 24-ல், தனது 42-வது வயதில் மார்சி உயிரிழந்தார்.

9/11 தாக்குதல் முடிந்து பல ஆண்டுகள் கடந்தாலும், அந்தச் சம்பவம் மார்சி-யின் நினைவில் இருந்து மறையவில்லை. அவளது வாழ்க்கையை 9/11 சம்பவம் தலைகீழாக புரட்டிப்போட்டுவிட்டது எனவும் “9/11 ஒருநாள் தன்னைத் பாதிக்கும்” என்ற அச்சத்துடனேயே மார்சி வாழ்ந்ததாகவும் அவரது தோழி குறிப்பிடுகிறார்.

இறுதியில், அவர் பயந்தது போலவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். 9/11 தாக்குதல் நடந்து 25 ஆண்டுகள் கடந்துவிட்டாலும், மார்சியின் அந்தப் புகைப்படம் மட்டும் இன்னும் அந்த நாளின் துயரத்தையும், அதில் உயிர் தப்பியவர்கள் எதிர்கொண்ட சொல்ல முடியாத வலியையும் உலகுக்கு நினைவூட்டிக்கொண்டு தான் இருக்கிறது.

The story behind ‘Dust Lady’
2026 இறுதிக்குள் 3 கடுமையான புயல்கள் உருவாக வாய்ப்பு: இஸ்ரோ அதிர்ச்சி எச்சரிக்கை!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com