உலக இணையத்திலிருந்து பிரிய விரும்பும் ரஷ்யா... காரணம் என்ன?

உலக இணையத்திலிருந்து பிரிய விரும்பும் ரஷ்யா... காரணம் என்ன?
உலக இணையத்திலிருந்து பிரிய விரும்பும் ரஷ்யா... காரணம் என்ன?

இணையத்தைக் கட்டுப்படுத்துவது கடினம் என்பதால் உலகத்தின் தொடர்பிலிருந்து துண்டித்துக் கொண்டு ரஷ்யாவுக்கென தனிப்பட்ட இணையக் கட்டமைப்பை உருவாக்கும் முயற்சியைத் தீவிரப்படுத்தியுள்ளது ரஷ்ய அரசாங்கம்.

உக்ரைனில் ரஷ்யப் படைகள்  நடத்தும் தாக்குதல்கள், அதற்குப் பதிலடி கொடுக்கும் உக்ரைன் ராணுவத்தின் நடவடிக்கைகள் தொடர்பான செய்திகளை உலகம் தொடர்ந்து உற்றுநோக்கி வருகிறது. செய்தி நிறுவனங்கள் ஒரு பக்கம் இருக்க, சமூக வலைதளங்கள் வாயிலாக உலகம் முழுக்க பரவும் புகைப்படங்கள் , வீடியோக்களால் ரஷ்யாவிலும் அந்நாட்டு அரசுக்கு எதிராகப் போராட்டங்களை மக்கள் நடத்தி வருகிறார்கள்.

ரஷ்யா உடனடியாக போரை நிறுத்த வேண்டுமென மக்கள் குரல் கொடுத்து வரும் வேளையில் ரஷ்ய அரசுக்கு எதிரான கருத்துகள் மக்களிடத்தில் சென்று சேர்வதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ரஷ்யாவில் ஃபேஸ்புக், ட்விட்டர் , இன்ஸ்டாகிராம் ஆகியவை முழுமையாகத் தடை செய்யப்பட்டுவிட்டன. கடந்த 2019-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட  இணையச் சட்டத்தின்படி செய்தி நிறுவனங்கள் , சமுக வலைதளங்கள் உட்பட அனைத்தும் தணிக்கைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றன.

மேலும் உள்நாட்டு இணையத்தை முழுமையாகத் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்வதற்கான பணிகளை புதின் அரசு முழுவீச்சில் தொடங்கியுள்ளது. அதன்படி கடந்த 11-ம் தேதிக்குள் உலகளாவிய இணையத்துடனான தொடர்புகளை உடனடியாக துண்டிக்க வேண்டும் என்றும், சர்வர்கள் மற்றும் டொமைன்கள் அனைத்தும் ரஷ்யாவுக்குள் மாற்றப்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்ததாகச் செய்தி வெளியாகின.

கடந்த 2011-12 ம் ஆண்டில் புதினுக்கு எதிராக ரஷ்யாவில் போராட்டங்கள் நடைபெற்றன. அப்போது சமூக வலைதளங்களில் பரவிய கருத்துகளே அந்த போராட்டங்களுக்குக் காரணம் என ரஷ்ய அரசு கருதியது. இணையக் கட்டமைப்பானது அமெரிக்காவை மையமாக வைத்தே செயல்பட்டு வருகிறது.

எனவே இணையத்தைக் கட்டுப்படுத்துவது கடினம் என்பதால் உலகத்தின் தொடர்பிலிருந்து துண்டித்துக் கொண்டு ரஷ்யாவுக்கென தனிப்பட்ட இணையக் கட்டமைப்பை உருவாக்கும் பணிகளைத் தொடங்கியது. 2019-ம் ஆண்டில் இதற்கான வேலைகளை முடுக்கி விட்டது ரஷ்ய அரசாங்கம். அதன் பின்பு கோவிட் -19 பாதிப்பால் அந்தப் பணிகள் சற்று தாமதமாகின. இப்போது ரஷ்யா-உக்ரைன் போரால் உள்நாட்டு இணையத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியைத் தீவிரப்படுத்தியுள்ளது ரஷ்ய அரசாங்கம்.

இதையும் படிக்க: ரஷ்யாவிற்கு சவால் விடுத்த எலான் மஸ்க்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com