கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டு மக்களுக்கு பல்வேறு சலுகைகளைக் கனடா நாட்டுப் பிரதமர் அறிவித்துள்ளார்.
சீனாவின் வுஹான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு ஆளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை இதுவரை 10ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இதன் தாக்கத்தால் இந்தியாவில் மட்டும் உயிரிழந்தவர் எண்ணிக்கை 5ஆக உயர்ந்து உள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 223ஆக அதிகரித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு கொரோனா குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வாட்ஸ் அப் சேவை மூலம் முயற்சி எடுத்து வருகிறது.
இந்நிலையில், கனடா நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாடு சந்தித்துள்ள பொருளாதார சிக்கலிலிருந்து மீண்டு எழுவதற்கும் நாட்டு மக்களை அதிலிருந்து பாதுகாப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு காணொளிப் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “ எல்லோரும் COVID-19 வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், உங்களுக்கு உதவ நாங்கள் கடுமையாக உழைத்து வருகின்றோம்” என்று அவர் நம்பிக்கை வார்த்தைகளைப் பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர் ஆற்றியுள்ள உரையில், “மக்களுக்காக 82 பில்லியன் டாலர் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. சொந்தமாகத் தொழில் செய்வோர் உட்பட பணிக்குச் செல்லமுடியாமல் வீட்டிலேயே இருக்க வேண்டி இருந்தால், அவர்கள் 900 டாலரை இரு வாரங்களுக்கு ஒருமுறை என 15 வாரங்கள் வரை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.
மேலும், “வேலையின்மையால் பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கு 5 பில்லியன் டாலர் நிதியுதவி செய்யப்படும். மாணவர்கள் பெற்றுள்ள கடன் தொகைக்கான வட்டி தொகை ஆறு மாதங்கள் வரை தள்ளுபடி செய்யப்படும். வீடு இல்லாதவர்களுக்கான உதவித் திட்டங்கள் இரு மடங்காக உயர்த்தப்படும். வருமான வரித் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு வரும் ஜூன் மாதம் 1 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படும். ஆகவே வருமானவரி செலுத்தக் கூடியவர்கள் ஆகஸ்ட் 31க்குப் பின்பு செலுத்தலாம். கனடா நாட்டு பூர்வக்குடி மக்கள் அனைவருக்கும் உடனடித் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான ஆதரவு நிதியாக 305 மில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.