ஈரான் போர் | நிலைகுலைந்து நிற்கும் கத்தார்.. மீண்டு வருமா?
அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியாகவும், வாஷிங்டனுக்கும் ஈரானுக்கும் இடையே நீண்டகால மத்தியஸ்தராகவும் விளங்கும் கத்தார் அரசாங்கம், போரைத் தவிர்க்க முயன்றது. ஆனால் அந்த முயற்சி தோல்வியடைந்தது. போரின்போது அமெரிக்க இராணுவத் தளங்களைக் கொண்டுள்ள வளைகுடா நாடுகளைக் குறிவைத்து, 700-க்கும் மேற்பட்ட ஈரானிய ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை கத்தார் எதிர்கொண்டது.
இந்தத் தாக்குதல்களால், அரசுக்குச் சொந்தமான கத்தார் எனர்ஜி நிறுவனம், போரின் ஆரம்பத்தில் தனது பிரதான தளமான ராஸ் லஃபானில் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது. அந்நிறுவனத்தால், அதன் எரிவாயு உலகச் சந்தைகளைச் சென்றடையும் ஒரே நீர்வழியான ஹார்முஸ் ஜலசந்தி வழியாகப் பாதுகாப்பாக எரிவாயுவை ஏற்றுமதி செய்ய இயலவில்லை.
மார்ச் மாத நடுப்பகுதியில், ஈரானியத் தாக்குதல்கள் ராஸ் லஃபானை நேரடியாகத் தாக்கி, பெரும் சேதத்தை ஏற்படுத்தின. அதனைச் சரிசெய்ய 5 ஆண்டுகள் வரை ஆகலாம் என்று கத்தாரின் எரிசக்தி அமைச்சர் சாத் அல்-காபி அறிவித்தார். இதனால் கத்தாருக்கு ஏற்படும் ஆண்டு வருவாய் இழப்பு சுமார் 20 பில்லியன் டாலராக இருக்கும் என்றும், இது இந்த ஆண்டு கத்தார் ஈட்டும் என எதிர்பார்க்கப்பட்ட மொத்த அரசாங்க வருவாயில் 37 சதவீதத்திற்குச் சமம் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்த போர் இந்தப் பிராந்தியம் முழுவதையும் 10 முதல் 20 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளியுள்ளது" என்று அல்-காபி ராய்ட்டர்ஸிடம் கூறியிருந்தார். இந்தப் போர் கத்தாரின் பொருளாதாரத்தைப் புரட்டிப் போட்டு, வணிகத்திற்கான புகலிடம் என்ற நாட்டின் நற்பெயரையும் ஆட்டம் காணச் செய்துள்ளது.
போரின் தாக்கத்தால் சுற்றுலா நலிவடைந்தது. ஒரு காலத்தில் தலைநகரான தோஹாவில் நின்று சென்ற, உலகம் முழுவதும் சுற்றிவந்த கத்தார் ஏர்வேஸ் விமானங்கள் நிறுத்தப்பட்டன. வசதி படைத்த பல வெளிநாட்டுக் குடியிருப்பாளர்கள் நாட்டைவிட்டு வெளியேறினர்.
அமெரிக்கா உடனான கத்தாரின் நெருங்கிய உறவு
நாட்டைப் பாதுகாக்கும் நோக்கில், கத்தாரின் அரச குடும்பம், அமெரிக்காவுடனான தனது உறவைச் சார்ந்திருந்தது. கத்தாரில் ஒரு பெரிய விமானப்படைத் தளம் இருப்பதுடன், நாட்டைப் பாதுகாப்பதாகவும் அமெரிக்கா உறுதியளித்திருந்தது.
சமீபத்திய ஆண்டுகளில், அதிபர் ட்ரம்புடன் நெருங்கிய உறவுகளை வளர்த்துக்கொள்ளும் நோக்கில், அரசாங்கம் அவருக்கு ஒரு போயிங் 747 ரக விமானத்தை நன்கொடையாக வழங்கியது. கத்தார் அரசாங்கத்திற்குச் சொந்தமான ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம், கத்தாரில் ட்ரம்ப் பெயரில் ஒரு கோல்ஃப் மைதானத்தை அமைப்பதற்காக, கடந்த ஆண்டு ட்ரம்பின் குடும்பத் தொழிலான ட்ரம்ப் ஆர்கனைசேஷனுடன் ஒரு ஒப்பந்தம் செய்திருந்தது. .
நிலைமையை மதிப்பீடு செய்யும்போது, கத்தார் அரசாங்கம் ஒரு கசப்பான உண்மையை புரிந்துள்ளது. அமெரிக்காவுடனான அதன் வலுவான உறவுகளோ அல்லது ஈரானுடனான அதன் சுமுகமான உறவோ அதனை எந்த தாக்குதலில் இருந்தும் காப்பாற்றவில்லை. போரினால் இந்த நாடுகள் அனைத்தும் ஈரான் மீதான தங்களது அணுகுமுறைகளையும், அமெரிக்கா உடனான உறவுகளையும் மறுமதிப்பீடு செய்து வருகின்றன. மேலும் தங்களின் பாதுகாப்பு உத்திகளை மறுபரிசீலனை செய்யவும் நிர்பந்திக்கப்பட்டுள்ளன.

