தென் கொரியா | முன்னாள் அதிபரை கைதுசெய்ய சென்ற குழுவினர்.. தடுத்த ஆதரவாளர்கள்!
தென்கொரியாவின் அதிபராக இருந்த யூன் சுக் இயோல், கடந்த ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி, நாட்டுமக்களிடம் உரையாற்றியபோது, அவசரநிலை ராணுவச் சட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு எழுந்தது. தொடர்ந்து அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் பதவிநீக்க தீர்மானத்தைக் கொண்டு வந்தன. டிசம்பர் 14ஆம் தேதி இதற்கான வாக்குப்பதிவு தோல்வியில் முடிந்தாலும், 27ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் அவருக்கு எதிராக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, அவசரநிலை ராணுவச் சட்டத்தை அமல்படுத்தியதற்காக முன்னாள் அதிபர் யூன் சுக் இயோல் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கு சியோல் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், கடந்த வாரம் யூன் சுக் இயோலை கைதுசெய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டில் அவர் மீதான நீதிமன்ற நடவடிக்கைக்கு பலரும் வரவேற்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில், அந்நாட்டு போலீசார் மற்றும் வழக்கறிஞர்களை உள்ளடக்கிய கூட்டு புலனாய்வுக் குழுவின் அதிகாரிகள் யூன் சுக் இயோலை கைதுசெய்ய, இன்று காலை அவரது இல்லத்திற்குச் சென்றனர். ஆனால் அவரது ஆதரவாளர்கள் வீட்டிற்கு முன் குவிந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டத்தில் அவர்களை கைதுசெய்யப் போகவிடாமல் தடுத்தனர். இதையடுத்து அங்கு காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். இதனால் இருதரப்புக்கும் மோதல் நிலவியது. தவிர, அங்கு மேலும் பதற்றம் நிலவியதைத் தொடர்ந்து, இயோல் கைது செய்யப்படவில்லை.
இயோலை கைது செய்ய விசாரணை அதிகாரிகளுக்கு ஜனவரி 6 வரை அவகாசம் இருப்பதையடுத்து, அவர்கள் திரும்பியதாகவும், இந்த வாரஇறுதிக்குள் மீண்டும் யூனைக் கைது செய்ய அவர்கள் முயற்சி செய்யலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. என்றாலும் இயோலின் ஆதரவாளர்களால் இது அவர்களுக்குப் பெரும் சவாலாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் தளத் தலைவரான பார்க் சான்-டே, இயோலைக் கைதுசெய்ய புலனாய்வுக் குழுவை வலியுறுத்தியுள்ளார்.