தங்கம் விலை சரியுமா? அமெரிக்கா எடுக்கப்போகும் அந்த முடிவு.. எதிர்பார்ப்போடு காத்திருக்கும் உலகம்!
கடந்த 100 ஆண்டுகளில் பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை திடீர் என அதிகரித்து வந்துள்ளது. ஆனால், கடந்த இரண்டு வருடங்களில் தங்கத்தின் விலை வரலாற்றில் இல்லாத அளவு பல மடங்கு அதிகரித்தது. இது, சர்வதேச அரங்கில் பெரும் அசாதாரண நிகழ்வாகப் பார்க்கப்பட்டது. தங்கம் விலை இந்த அளவு அதிகரித்ததற்கு ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் கணிக்க முடியாத செயல்பாடு ஆகியவையே முக்கியக் காரணமாகப் பார்க்கப்பட்டது.
இதன் காரணமாக, சீனா உள்ளிட்ட நாடுகள் டாலரின் மேல் இருந்த நம்பிக்கையை இழந்து, தங்களிடமிருந்த அமெரிக்க பத்திரங்களை முன்னெப்போதும் இல்லாத அளவு விற்பனை செய்து அதற்குப் பதில் தங்கத்தை வாங்கிக் குவித்தன. இந்தியாவும் கடந்த 2024-ஆம் ஆண்டு மட்டும் 77 டன் தங்கத்தை வாங்கிக் குவித்தது.
இந்த வரி விதிப்பு நடவடிக்கைகளால் அமெரிக்காவில் பணவீக்கம் ஏற்பட்டு டாலரின் மதிப்பு குறைந்தது. இதனால் டாலருக்கு மாற்றான, பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதி அதில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்தனர். சர்வதேச அரங்கில் தங்கத்தின் விலை உச்சத்தை அடைய இந்த நிகழ்வே முக்கியக் காரணமாகப் பார்க்கப்பட்டது.
எனினும், இந்த ஆண்டு மே மாதத்தில் அமெரிக்க பெடரல் வங்கியின் தலைவராக கெவின் வார்ஷ் (Kevin Warsh) தேர்வு செய்யப்பட்டார். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகிதங்களை நிலையாக வைத்திருக்க விரும்பம்கொண்ட இவர் பதவிக்கு வந்த பின்னர், தங்கத்தின் மீதான முதலீடு குறைந்து, அமெரிக்கப் பத்திரங்கள் மீதான முதலீடு அதிகரிக்கத் தொடங்கியது. இதன் காரணமாக, சர்வதேச அளவில் தங்கத்தின் விலை குறையத் தொடங்கியது.
இந்த நிலையில், இன்று அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதங்கள் தொடர்பான தனது அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடவுள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வட்டி விகிதங்களை குறைக்கத் தொடர்ந்து வலியுறுத்திவரும் நிலையில், ஃபெடரல் வங்கியின் முடிவு என்ன என்பதை அறிய உலக நாடுகள் காத்திருக்கின்றன.
ஃபெடரல் வங்கி வட்டி விகிதங்களை நிலையான வைத்திருந்தாலோ அல்லது அதிகரித்தாலோ முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீதான முதலீட்டைக் குறைத்து டாலரில் முதலீடு செய்வார்கள். அது, உலகளவில் தங்கத்தின் விலையைப் பல மடங்கு சரியவடையச் செய்யும்.
அதேநேரம், ட்ரம்பின் கோரிக்கையை ஏற்று ஃபெடரல் வங்கி வட்டி விகிதங்களைக் குறைத்தால், முதலீட்டாளர்கள் டாலர் மீதான முதலீட்டைக் குறைத்து தங்கத்தில் முதலீடு செய்வார்கள். இந்தச் சூழல் ஏற்பட்டால் உலகளவில் தங்கத்தின் விலை கடுமையாக அதிகரிக்கும் என்பதால், ஃபெடரல் வங்கி இன்று எடுக்கப்போகும் முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.

