தாய்லாந்து: மனைவி கீழே இறங்கியது கூட தெரியாமல் 150 கி.மீ காரை ஓட்டிச்சென்ற கணவன்!

தாய்லாந்து: மனைவி கீழே இறங்கியது கூட தெரியாமல் 150 கி.மீ காரை ஓட்டிச்சென்ற கணவன்!
தாய்லாந்து: மனைவி கீழே இறங்கியது கூட தெரியாமல் 150 கி.மீ காரை ஓட்டிச்சென்ற கணவன்!

ஞாபக மறதி என்பது பலருக்கும் இருக்கக்கூடிய பிரச்னைதான். சின்ன சின்ன வேலைகளை மறந்துபோவது சகஜம்தான் என்றாலும், தன்னுடன் பயணம் வந்த மனைவியையே விட்டுவிட்டு 150 கி.மீ தூரம் சென்றுள்ளார் ஒரு கணவர்.

தாய்லாந்தின் மஹா சர்காம் மாகாணத்தைச் சேர்ந்தவர் பூண்டோம் சாய்மூன்(55). இவருடைய மனைவி அம்னாய் சாய்மூன். இவர்கள் இருவரும் கிறிஸ்துமஸ் தினத்தன்று ரோடு ட்ரிப் ஒன்று செல்ல திட்டமிட்டுள்ளனர். இருவரும் ஜாலியாக பேசிக்கொண்டே பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் அதிகாலை 3 மணியளவில் சிறுநீர் கழிப்பதற்காக வாகனத்தை நிறுத்தியுள்ளார் பூண்டோம். சாலையோரம் வாகனத்தை நிறுத்திய கணவனிடம், ஏன் கேஸ் ஸ்டேஷனில் வாகனத்தை நிறுத்தவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார் அம்னாய்.

ஆனால் அதற்கு எந்த பதிலும் அளிக்காத பூண்டோம், சாலையோரத்தில் சிறுநீர் கழித்துள்ளார். அப்போது, தானும் இயற்கை உபாதையை வெளியேற்ற எண்ணிய அம்னாய் சற்று தள்ளி காட்டுப்பகுதிக்குள் சென்றுள்ளார். வாகனத்தை விட்டு மனைவி இறங்கியதை கவனிக்காத பூண்டோம், ஜாலியாக வாகனத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

காட்டுப்பகுதியிலிருந்து சாலைக்கு வந்த மனைவிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கிருந்த வாகனத்தையும், கணவனையும் காணவில்லை. துரதிர்ஷ்டவசமாக, தனது ஹேண்ட்பேக் மற்றும் செல்போன் இரண்டுமே வாகனத்தில் இருந்ததால் அவரால் யாரையும் தொடர்புகொள்ள முடியவில்லை. வேறு வழியேயின்றி, அம்னாய் கிட்டத்தட்ட 20 கி.மீ(12.4 மைல்கள்) நடந்தே சென்றுள்ளார்.

ஒருவழியாக காபின் பூரி மாவட்டத்தை அதிகாலை 5 மணியளவில் சென்றடைந்த அம்னாய், உள்ளூர் போலீசை தொடர்புகொண்டுள்ளார். தனது செல்போன் எண்ணை மட்டுமே தெரிந்து வைத்திருந்த அம்னாய், தொடர்ந்து அழைப்பு விடுத்துள்ளார். அப்போதும் பூண்டோம் செல்போனை பார்க்கவில்லை. பூண்டோமின் செல்போன் எண் தெரியாததால் ஒருவழியாக போலீசாரின் உதவியுடன் அவரை தொடர்புகொண்டுள்ளார்.

இதில் சோகம் என்னவென்றால் கிட்டத்தட்ட 159.6 கி.மீ தூரம் வாகனத்தில் சென்ற பூண்டோம் தன்னுடன் வந்த மனைவியை நினைத்துக்கூட பார்க்கவில்லை என்பதுதான். ஒருவழியாக காலை 8 மணியளவில் பூண்டோமை தொடர்புகொண்ட காவலர்கள் தனது மனைவியை விட்டுச்சென்றது பற்றி தெரிவித்துள்ளனர். தனது மனைவி தன்னுடன் வந்தது ஞாபகம் இல்லை என்று கூறிவிட்டாராம் பூண்டோம்.

இதேபோல் துபாயில் வசிக்கும் தமிழர் ஒருவர், பார்க்கிங்கில் இரவு நடைபயிற்சி சென்றுவிட்டு தவறுதலாக பி ப்ளாக்கிற்கு பதிலாக ஏ ப்ளாக் லிப்ட்டில் ஏறிச்சென்று தனது வீட்டை தேடிய சுவாரஸ்ய சம்பவத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இது பலராலும் லைக் செய்யப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com