முதலை வாயில் கையை விட்டா இதான் நடக்கும் ! வைரல் வீடியோ
தாய்லாந்து நாட்டில் முதலையின் வாய்க்குள் கையை விட்டு சாகசம் செய்தவரை திடீரென முதலை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் ஏராளமான விலங்கியல் பண்ணைகள் இருக்கின்றன. இதில் முக்கியமாக தாய்லாந்து உலக சுற்றுலா வாசிகளின் சொர்க்க பூமி. தாய்லாந்து விலங்கியல் பூங்காக்களில் புலியுடன் உட்கார்ந்து போட்டோவுக்கு போஸ் கூட கொடுக்கலாம். அதற்கேற்றார்போல விலங்குகளை தயார்படுத்தி வைத்திருப்பார்கள். பொதுவாக இதுபோல விலங்குகளிடம் இதுபோன்ற விளையாட்டுகளில் ஈடுபடும்போது அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாது. முழுமையான பாதுகாப்பு பொது மக்களுக்கு வழங்கப்படும்.
இந்நிலையில் தாய்லாந்து நாட்டில் முதலையின் வாய்க்குள் கையை விட்டு சாகசம் செய்தவரை திடீரென முதலை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. சியாங்ராயில் உள்ள பொக்கதாரா உயிரியல் பூங்காவில் முதலைகளுடன் ஊர்வனங்களை கையாள்பவர்கள் சாகசத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முதலையின் வாய்க்குள் தனது கையை விட்டவாறு ஒருவர் சாகசம் காட்டிக்கொண்டிருந்தார். திடீரென தனது வாயை முதலை இறுக்கமாக மூடிக்கொண்டதை கண்ட பார்வையாளர்கள் அதிர்ந்து போயினர். வலியால் துடிதுடித்துப்போன அவர், உடனடியாக சுதாரித்துக்கொண்டு தனது கையை முதலையின் வாயிலிருந்து விடுவித்துக் கொண்டார். இதில் முதலை வாயில் கையை விட்டவர் சிறு காயங்களுடன் தப்பினார்.