இந்தோனேசியாவில் திமிங்கலங்களுக்கு என்னாச்சு? ஒன்றை மட்டும் கடலில் விட்ட மீனவர்கள்
இந்தோனேசிய கடற்கரையில் உயிரிழந்த நிலையில் பத்து திமிங்கலங்கள் கரையொதுங்கின. உயிருடன் இருந்த பதினோராவது திமிங்கலத்தை மட்டும் மீனவர்கள் கூட்டமாகச் சேர்ந்து கடலில் விட்டனர்.
அந்த திமிங்கலம் காயம்பட்டிருந்த நிலையிலும், கடலுக்குள் விட்டதும் நீந்திச் செல்ல முயற்சி செய்தது. அதைக் கண்ட மீனவர்கள் ஆரவாரத்துடன் திமிங்கலத்தை வழியனுப்பி வைத்தனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவலாக பார்க்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமையன்று, இந்தோனேசிய கடற்கரையில் பத்து திமிங்கலங்கள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கின. அடுத்துவந்த திமிங்கலம் உயிருடன் காணப்பட்டதால், அதை மட்டும் கடலில்விட முடிவுசெய்த மீனவர்கள் நான்கைந்து பேராகச் சேர்ந்து கடலில் தள்ளிக்கொண்டு சென்றனர்.
தொலைதூர மாகாணமான கிழக்கு நுசா தெங்கராவில் 6.5 முதல் இருபது அடி வரை நீளமுள்ள இந்தப் பாலூட்டிகள் காணப்படுவதாக என்று நீர் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த அதிகாரி இக்ரம் தெரிவித்தார்.
ஒரு திமிங்கலத்தை உயிருடன் மீட்ட பின்னர், உயிரிழந்த பத்து திமிங்கலங்களின் சடலங்களை குழிகள் தோண்டி அடக்கம் செய்தனர். அவற்றின் உடல்களில் பாறைகளில் மோதியதால் ஏற்பட்ட வெட்டுப்பட்ட காயங்கள் காணப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.