இலங்கை: போராட்டத்தில் ஈடுபட்ட பேராதனை பல்கலை., மாணவர்கள் மீது கண்ணீர்புகை வீச்சு
இலங்கையில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பேராதனை பல்கலைக்கழக மாணவர்களை கலைக்க கண்ணீர்புகை வீசப்பட்டது
நேற்று மாலை முதல் இலங்கையில் ஊரடங்கு அமலில் உள்ளபோதும், கண்டியில் உள்ள பேராதனை பல்கலைக்கழகத்தில் இலங்கை அரசுக்கு எதிராக ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சூழலில், அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பேராதனை பல்கலைக்கழக மாணவர்களை கலைக்க கண்ணீர்புகை பயன்படுத்தப்பட்டது.
இதுபோல இலங்கை முழுவதும் பொதுமக்களும், எதிர்கட்சியினரும் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள ராஜபக்சே சகோதரர்கள் தலைமையிலான இலங்கை அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கையில் சுற்றுலாத் துறை முடக்கம், பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால் இலங்கையில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பால் மாவு போன்ற உணவுப் பொருட்கள், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு கிடைக்காத நிலை உள்ளது. இதோடு 13 மணி நேர மின்வெட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் வெகுண்டெழுந்த மக்கள், ராஜபக்சே சகோதரர்கள் அரசிலிருந்து வெளியேறக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராணுவ வாகன எரிப்பு உள்ளிட்ட வன்முறை சம்பவங்களும் அரங்கேறின. இன்று மிகப்பெரிய போராட்டம் நடத்துவதற்கு மக்கள் அழைப்பு விடுத்திருந்த நிலையில், இலங்கை முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இலங்கை அரசு வெளியிட்டுள்ள அரசிதழில், நேற்று மாலை 6 மணி முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை (36 மணி நேரத்துக்கு) ஊரடங்கு அமலில் இருக்கும் என என அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே கூறியுள்ளார்.