விரைவுச் செய்திகள்: கோவையில் சாதிக்கொடுமை | ஏதென்ஸில் காட்டுத்தீ

விரைவுச் செய்திகள்: கோவையில் சாதிக்கொடுமை | ஏதென்ஸில் காட்டுத்தீ
விரைவுச் செய்திகள்: கோவையில் சாதிக்கொடுமை | ஏதென்ஸில் காட்டுத்தீ

கிராம நிர்வாக அலுவலகத்தில் சாதிக் கொடுமை: கோவை ஒற்றர்பாளையம் ஊராட்சி ‌கிராம நிர்வாக அலுவலகத்தில், பட்டியலின அரசு ஊழியரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்த கொடுமை சம்பவம் அரங்கேறியிருக்கிறது. கண்ணீர் விட்டு கதறியபடி காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டார் அரசு ஊழியர். இந்த சம்பவம் பற்றி நேரில் விசாரணை நடத்தப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் சமீரான் புதிய தலைமுறைக்குத் தெரிவித்திருக்கிறார்.

கருணாநிதி நினைவு தினம் - முதல்வர் மரியாதை: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூன்றாவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அவரது சிஐடி காலனி மற்றும் கோபாலபுரம் இல்லங்களிலும் மரியாதை செலுத்தினார்.

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை: ஜம்மு காஷ்மீரின் பத்காம் பகுதியில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை நடந்ததில் ஒரு பயங்கரவாதிக் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இதில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

9 -12 வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க உத்தேசம்: தமிழ்நாட்டில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை 50% மாணவர்களுடன் பள்ளிகளை திறக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. மருத்துவக் கல்லூரிகள், செவிலியர் படிப்பு உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் ஆகஸ்ட் 16 முதல் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, சனி, ஞாயிறுகளில் வழிபாட்டுக்கு தடை: தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்து அரசு உத்தரவிட்டிருக்கிறது. வெள்ளி, சனி, ஞாயிறுகளில் அனைத்து மத வழிபாட்டு தலங்களில் வழிபடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ரூ.6.5 கோடி செல்போன்கள் கொள்ளை: சென்னையில் இருந்து கண்டெய்னரில் சென்ற செல்போன்களை கர்நாடகாவில் ஒரு கும்பல் கொள்ளையடித்தது. லாரி ஓட்டுநரை கட்டிப்போட்டு ஆறரை கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்கள் திருடப்பட்டுள்ளது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 488 சரிவு: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 488 ரூபாய் குறைந்தது. ஒரு கிராம் 61 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 440க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மின்வெட்டு இல்லை; பராமரிப்பு பணி மட்டுமே: பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் செய்யப்படுவது தவறாக சித்தரிக்கப்படுகிறது என்றும், தமிழகத்தில் மின்வெட்டு என்ற நிலையே இல்லை என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி புதிய தலைமுறைக்கு பேட்டியளித்திருக்கிறார்.

டம்மி வெடிகுண்டை வெடிக்கச் செய்து ஒத்திகை: ராமேஸ்வரம் கோயிலில் டம்மி வெடிகுண்டை வெடிக்கச் செய்து தீவிரவாத தாக்குதல் தடுப்பு ஒத்திகை பார்க்கப்பட்டது. மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலும் தேசிய பாதுகாப்புப் படையினர் துப்பாக்கியுடன் அணிவகுத்து ஒத்திகை பார்த்தனர்.

ரிலையன்ஸ் Vs அமேசான் வழக்கு: ஃபியூச்சர் ரீடெயில் நிறுவனத்தை ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைப்பதற்கான ஒப்பந்தம் செல்லாது என அமேசான் நிறுவனத்திற்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

50 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தி சாதனை: நாடு முழுவதும் 50 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டது. தொற்றுக்கு எதிரான போருக்கு உத்வேகம் அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்திருக்கிறார்.

லடாக் எல்லையில் படைகள் வாபஸ்: லடாக் எல்லைப்பகுதியிலிருந்து இந்திய - சீன படைகள் 15 மாதங்களுக்குப் பிறகு வாபஸ் பெற்றது. படைகள் திரும்பப் பெறப்பட்டதை இரு தரப்பும் உறுதிப்படுத்தின.

ஏதென்ஸில் காட்டுத்தீ: க்ரீஸ் நாட்டின் ஏதென்ஸில் பயங்கர காட்டுத்தீப் பரவிவருகிறது. 4 நாட்களாக தீயை கட்டுபடுத்த முடியாமல் திணறிவருகின்றனர்.

இந்திய அணி 95 ரன்கள் முன்னிலை: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் 95 ரன்கள் முன்னிலை பெற்றது இந்தியா. கே.எல்.ராகுல், ஜடேஜா அசத்தல். கடைசி நேரத்தில் மேஜிக் காட்டினார் பும்ரா.

டெஸ்ட் கிரிக்கெட் - 'ஜிம்மி' புதிய சாதனை: டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் புதிய சாதனை படைத்தார். அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய 3 ஆவது வீரர் என்ற கும்ப்ளேவின் சாதனையை முறியடித்தார்.

ஆஸி., படுதோல்வி - வங்கதேசம் வரலாறு: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரை வென்று வங்கதேசம் அணி வரலாற்று சாதனை படைத்தது. நிர்ணயிக்கப்பட்ட குறைவான இலக்கைக்கூட எட்ட முடியாமல் மூன்றாவது போட்டியிலும் ஆஸ்திரேலியா தோல்வி அடைந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com