“தமிழக மீனவர்கள் கடல் வளத்தை அழிக்கிறார்கள்” - இலங்கை மீனவர்கள் குற்றச்சாட்டு
தமிழக படகுகளை இலங்கை அரசு ஏலம் விடுவதை யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சம்மேளன தலைவர் வரவேற்றுள்ளார்.
எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த 105 விசைப்படகு மற்றும் நாட்டுப் பட்டுகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து இலங்கை கடற்படை முகாம்களில் நிறுத்தி வைத்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை கடற்படையினால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த படகுகளை வருகின்ற பிப்ரவரி 7ஆம் தேதி முதல் ஏலத்தில் விடப்போவதாக இலங்கை அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதையடுத்து இலங்கை யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களில் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா மற்றும் இலங்கை மீனவர்கள் தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடுவதை வரவேற்பதாகவும் இந்த செயல் காலம் தாழ்த்தியதாக இருந்தாலும் அதனை எந்த தடை இன்றியும் ஏலம் விட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் தமிழக மீனவர்கள் இழுவைமடி வலையை பயன்படுத்தி எல்லை தாண்டி வந்து மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு கடல் வளத்தை அழித்து வருவதாக இலங்கை மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்