மின்னல் தாக்குதலில் நிறம் மாறிய கண்கள் | அனுபவம் பகிரும் ஆஸி. பெண்!
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் வசித்து வருபவர் கார்லி எலக்ட்ரிக் (30). வானிலை குறித்து அறிந்துகொள்வதில் சிறு வயது முதலே ஆர்வமாக் இருந்து வருகிறார். முக்கியமாக, வானிலை மீது பற்று வைத்திருக்கும் அவர், மின்னல் சார்ந்த 3 கருத்துருக்களை பச்சை குத்தியுள்ளார். இந்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு முன்பு கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பரில் நிலைகொண்டிருந்த புயலை படம் பிடிப்பதற்காக வீட்டை விட்டு வெளியில் சென்றுள்ளார். அப்போது, திடீரென மின்னல் தாக்கியதில் சுயநினைவின்றி கிடந்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து கார்லி, “அன்று, போதை மருந்து கொடுத்தது போன்று உணர்ந்தேன். அந்தச் சம்பவத்திற்குப் பின்னர், கால்களில் உணர்வனைத்தும் இழந்தது போன்று இருந்தது. வியர்த்து கொட்டியது. மயக்கம் வருவது போன்ற உணர்வுடன், பரவசத்தில் இருப்பதுபோல் இருந்தது. ஓர் அங்குலம்கூட நகர முடியவில்லை. பிறகு, சிகிச்சையளிக்க அவசரகால மருத்துவப் பணியாளர்கள் வந்தபோது, என்னுடைய கால்களும், கைகளும் நீல வண்ணத்தில் மாறியிருந்ததாக தெரிவிக்கப்பட்டது. தலை மற்றும் கழுத்து தவிர எதனையும் என்னால் அசைக்க முடியவில்லை என்றும், நான் விழித்திருந்தபோதும், சுவாசிக்க போராடியதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். கடைசியாக மருத்துவர்கள், பலர் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது மட்டுமே அவருக்கு நினைவில் இருந்தது. அதன்பின்னர் பல மணிநேரம் சுயநினைவின்றி இருந்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.
பின்னர், கீராவுனோபாராலிசிஸ் எனப்படும் மின்னல் முடக்கத்திற்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மின்னல் தாக்கினால் கால்களில் தற்காலிக முடக்குவாதம் ஏற்படும் நிலையை இது குறிக்கிறது. தீவிர சிகிச்சைக்கு பின்னர் அவர் பிழைத்துக்கொண்டார். மின்னல் தாக்குதலுக்கு பின்னர், அவர் உயிருடன் இருப்பதே அதிசயம் என பார்க்கப்படுகிறது. சிகிச்சை முடிந்து, பூரண குணமடைந்த பின்னர், அவருடைய கண்கள் ஆச்சரியம் ஏற்படுத்தும் வகையில், பச்சை நிறத்தில் இருந்து அடர் பழுப்பு நிறத்திற்கு மாறியிருந்தன. முன்னதாக, அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் 2017ஆம் ஆண்டில் இளம்பெண் ஒருவர் மின்னல் தாக்கிய பின்னர் பார்வை மேம்பட்டு விட்டது என கூறியிருந்தார். அதன்பின்பு அவர் கண்ணாடி அணிய வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.