இந்தோனேசியாவின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. ஆனால், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.
இந்தோனேசியாவின் தனிம்பர் தீவுகள் மற்றும் பாண்டா கடல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியிலும் உணரப்பட்டுள்ளது. அங்குள்ள டார்வின் நகரத்தில் நில அதிர்வு ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியான பபுவாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6 புள்ளி 1 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. பப்புவா மாகாணம் அபேபுரா நகரம் அருகே இந்தோனேசியா நேரப்படி காலை பத்து மணி அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து காலை 11. 53 மணிக்கு அம்போன் தீவை மையமாகக் கொண்டு மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7 புள்ளி 3 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. 208 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் சுனாமி வர வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இந்தோனேசியாவில் கடந்த வாரமும் 6 புள்ளி 3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.