அமெரிக்காவில், வெள்ளத்தில் சிக்கி 200 இந்திய மாணவர்கள் தவிப்பு!
அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழக வளாகத்தில் புகுந்துள்ள வெள்ளம் காரணமாக, சுமார் 200 இந்திய மாணவர்கள் அதில் சிக்கியுள்ளனர்.
அமெரிக்காவை தாக்கியுள்ள ஹார்வே புயல் காரணமாக அங்கு கடும் மழை பெய்து வருகிறது. டெக்சாஸ் மாகாணம் வெள்ளத்தில் மிதக்கிறது. ஏராளமான உயிர்ச்சேதங்களும், பொருட்சேதங்களும் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹூஸ்டன் பல்கலைக்கழக வளாகத்திலும் வெள்ளம் புகுந்துள்ளது. அதனால், அங்கு படித்து வரும் சுமார் 200 இந்திய மாணவர்கள் வெள்ளத்தில் சிக்கித் தவித்து வருகிறார்கள்.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், ‘ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் 200 இந்திய மாணவர்கள் வெள்ளத்தின் பிடியில் சிக்கி இருப்பதாக அந்நகரில் உள்ள இந்திய துணைத்தூதர் அனுபம் ரே தகவல் அனுப்பியுள்ளார். இந்திய மாணவர்கள் கழுத்தளவு தண்ணீரால் சூழப்பட்டுள்ளனர். ஷாலினி, நிகில் பாட்டியா என்ற 2 மாணவர்கள், ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவ இந்திய துணைத்தூதர் விரைந்துள்ளார். இந்திய தரப்பில், மாணவர்களுக்கு உணவு வினியோகிக்க முன்வந்தபோதும் மீட்பு பணிகளுக்கு படகுகளின் தேவை இருப்பதால், அதற்கு அமெரிக்க கடலோர காவல்படை அனுமதி அளிக்கவில்லை’ என்று கூறியுள்ளார்.