கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான 'அவதார்' திரைப்படம், உலக சினிமாவையே ஆச்சரியத்திற்குள்ளாக்கியது. உலகமெங்கும் வசூலை வாரிக் குவித்த இப்படம், ஆஸ்கர் விருதுகளையும் வாரியது. இந்தப் படத்தின் 2ஆம் பாகத்தை எடுப்பதில் அதன் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் மும்முரம் காட்டி வருகிறார்.
படத்திற்கான பணிகள் மற்றும் படப்பிடிப்புகள் நியூசிலாந்தில் நடைபெற்று வந்த நிலையில், கொரோனா வைரஸால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, 2ஆம் பாகத்தின் ரிலீஸ் தேதி 2021 டிசம்பர் 17 என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ‘அவதார் 2’ தொடர்பாக ஆங்கில செய்தி இதழ் ஒன்றிற்குப் பேட்டியளித்துள்ள ஜேம்ஸ் கேமரூன், கொரோனா வைரஸால் பல்வேறு தயாரிப்பு வேலைகள் தடைப்பட்டிருப்பதாகவும், இது பல படங்கள் வெளியாவதைத் தாமதப்படுத்தியுள்ளதாகவும் கூறினார். அத்துடன் இந்த வைரஸ் திரையுலக முன்னேற்றத்திற்கு பெரும் தடையாக அமைந்திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், “கண்டிப்பாக அறிவிக்கப்பட்ட தேதியிலேயே ‘அவதார் 2’ வெளியாகும். எங்கள் பணியாளர்கள் வீட்டிலிருந்து தீவிரமாக பணிபுரிந்து கொண்டிருக்கின்றனர். இன்னும் ஓரிரு மாதங்களில் மீண்டும் ஷூட்டிங் தொடங்கும்” எனக் கூறினார்.
அத்துடன் படத்தின் மூன்றாம் பாகம் 2023 டிசம்பரில் வெளியாகும் எனவும், படத்தின் 4ஆம் பாகம் 2025 டிசம்பரில் வெளியாகும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும், 5ஆம் பாகம் 2027 டிசம்பரில் வெளியிடப்படும் எனக் குறிப்பிட்டார். இந்தப் பாகங்களை எடுக்க ஒரு பில்லியன் டாலர் வரை பட்ஜெட் நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். இந்திய மதிப்பில் ரூ.7,500 கோடி ஆகும்.