இலங்கையில் போராட்டக்காரர்கள் மீது ராஜபக்ச ஆதரவாளர்கள் திடீர் தாக்குதல்
இலங்கையில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர்.
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வரும் சூழலில், அரசுக்கு எதிராக மக்கள் நடத்தி வரும் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. போராட்டத்தை ஒடுக்க கடந்த சில தினங்களுக்கு முன்பு இரண்டாவது முறையாக அந்நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
இருந்தபோதிலும், மக்கள் போராட்டத்தை பாதுகாப்புப் படையினரால் அடக்க முடியவில்லை. இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவை பதவி விலக வலியுறுத்தி நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் அங்கு சட்டம் - ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இலங்கை அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது பிரதமர் மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் இன்று பயங்கர தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலில் 17 பேர் காயமடைந்தனர். தாக்குதலை கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். இதையடுத்து, அங்கு அதிக அளவிலான ராணுவத்தினரும், போலீஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர். அசம்பாவிதங்களை தடுப்பதற்காக இலங்கையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.