"இலங்கை தமிழர்களின் பூர்வீக பூமி" விக்னேஸ்வரனின் கருத்தால் நாடாளுமன்றத்தில் பரபரப்பு.
"இலங்கை நாடானது தமிழர் பூமி, இந்த மண்ணின் பூர்வீக குடிகள் தமிழர்கள், தமிழ்மொழிதான் இந்த நாட்டின் பிரதான மொழி" எனவும் தமிழ்மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஷ்வரன்,இலங்கை நாடாளுமன்றத்தின் முதல்நாள் அமர்வில் நேற்றைய தினம் நிகழ்த்திய உரை இன்று மிகப்பெரிய சர்ச்சையாக மாறியிருக்கிறது.
இது முற்றிலும் தவறான கருத்து என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார இன்று தெரிவித்துள்ளார். “நாடாளுமன்றத்தில் சத்தியபிரமாணம் செய்துகொள்ளும்போது இந்த நாட்டில் தனி ராஜ்ஜியம் நிறுவுவதற்கோ, அவ்வாறான முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு மற்றும் நிதி பங்களிப்பு வழங்கும் நடவடிக்கைகளுக்கோ ஈடுபட மாட்டோம் என்ற அடிப்படையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்துக்கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் யுத்தம் முடிவடைந்து "அனைவரும் இலங்கையர்கள்" என்ற ரீதியில் ஒன்றிணைந்து பயணிக்க நினைக்கும் இந்த தருணத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஷ்வரன் வெளியிட்ட கருத்து மிக மோசமானது. இந்த பூமி யாருடையது, யார் பூர்வீக குடிகள் என்பது தொடர்பில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிலைப்பாடுகள் இருக்கலாம் எனினும், அந்த நிலைப்பாடானது, இலங்கை நாடாளுமன்ற ஹன்சார்ட்டில் பதிவாகக் கூடாது. எனவே சி.வி.விக்னேஷ்வரன் வெளியிட்ட கருத்தை ஹன்சார்ட்டிலிருந்து நீக்க சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்த கருத்து பற்றி ஆராயப்படும் என கூறியுள்ளார்.