மகிந்த ராஜபக்ச பதவி விலகல்; எம்பி எக்ஸ்க்ளூசிவ் பேட்டி! இலங்கையில் அடுத்தது என்ன நடக்கும்?

மகிந்த ராஜபக்ச பதவி விலகல்; எம்பி எக்ஸ்க்ளூசிவ் பேட்டி! இலங்கையில் அடுத்தது என்ன நடக்கும்?
மகிந்த ராஜபக்ச பதவி விலகல்; எம்பி எக்ஸ்க்ளூசிவ் பேட்டி! இலங்கையில் அடுத்தது என்ன நடக்கும்?

இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலகியுள்ளார். பொருளாதார நெருக்கடியால் அரசுக்கு எதிராக மக்கள் போராடி வந்தநிலையில் மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்திருக்கிறார்.

பதவி விலகல் கடிதத்தை அதிபர் கோட்டாபயவுக்கு ராஜபக்ச அனுப்பிவைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. மகிந்த ராஜபக்சவின் பதவி விலகல் தொடர்பாக அதிபர் கோட்டாபய ராஜபக்சதான் முடிவெடுப்பார் என சொல்லப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இலங்கை எம்.பி. மனோ கணேசன் புதிய தலைமுறைக்கு பேசுகையில், `இதற்கு முன்னர் 3 முறை ராஜபக்ச விலகியதாக அறிவிப்புகள் வெளியாகியிருந்தது. இருப்பினும் இன்று இப்போது கிடைத்திருப்பது அதிகாரபூர்வமான தகவல்தான். இன்று பிரதமர் இல்லத்தில் நடந்த ராஜபக்சவின் கட்சி கூட்டத்துக்கு பின் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையில், போராட்டாக்கரர்களை தாக்க குண்டர்களையும் அவர்கள் அனுப்பியுள்ளனர். அவர்களின் இந்த செயலால், நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டிருக்கிறது. இருப்பினும் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை.

மகிந்த ராஜபக்சவின் குண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் செய்யும் காரியங்களால், எல்லோருக்கும் அச்சம் நிலவுகிறது. நிலைமையை உணர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளிட்டோர் சிலரும் ராஜினாமா செய்துள்ளனர். இருப்பினும் தொடர்ந்து அரசு பயங்கரவாதம் நிகழ்ந்துக் கொண்டேதான் வருகின்றது. இதை எதிர்த்து மக்களும் தொடர்ந்து கடுமையாக எதிர்ப்புக்குரல்கள் கொடுத்து வருகின்றனர். அரசு பயங்கரவாதமும், ராஜபக்ச அனுப்பிய குண்டர்களின் அடக்குமுறையும் நிறுத்தப்படவேண்டும்” என்றார்.

இதற்கிடையில் மக்களின் பாதுகாப்புக்காக இலங்கையில் ராணுவம் களமிறங்கியுள்ளது. மக்களின் பாதுகாப்புக்காகவே ராணுவம் களமிறங்கியுள்ளதாக இலங்கை பாதுகாப்புத்துறை அறிவிப்பு வெளியுட்டுள்ளது. போலவே இலங்கை ராணுவத்திற்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு அந்நாட்டு பாதுகாப்புத்துறை செயலாளர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இதற்கிடையில் மகிந்த ராஜபக்ச பதவி விலகியதால், அங்கு இலங்கை அமைச்சரவை கலைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை எம்.பி. சுமந்திரன் பேசுகையில், “பிரதமர் மகிந்த ராஜபக்ச, அதிபர் கோட்டாபய ராஜபக்ச இருவரும் ராஜினாமா செய்ய வேண்டும்” என வலியுறுத்தினார். தொடர் அழுத்தங்களை தொடர்ந்து, இலங்கையில் இடைக்கால அரசு அமைப்பது பற்றி அடுத்தகட்ட ஆலோசனை நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளன. நாளை அல்லது நாளைமறுநாள் இடைக்கால அரசு அமைப்பது பற்றி முடிவு எடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. கொழும்புவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்கள் கடுமையாக தாக்குதல் நடத்தினர். மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்களின் வன்முறை காரணமாக இலங்கையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பிரதமர் ராஜினாமா செய்ததையடுத்தது, அடுத்து என்ன என்பது கேள்விக்குறியாகியுள்ளது. நாளை மறுநாள் அமைக்கப்படும் இடைக்கால அரசே இதற்கான தீர்வாக அமையுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com