``நாட்டில் அமைதியை நிலைநாட்ட சிறப்பு குழு அமைப்போம்” இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க

``நாட்டில் அமைதியை நிலைநாட்ட சிறப்பு குழு அமைப்போம்” இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க
``நாட்டில் அமைதியை நிலைநாட்ட சிறப்பு குழு அமைப்போம்” இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க

இலங்கையில் பரபரப்பான சூழலில் இன்று நாடாளுமன்றம் கூடுகிறது. இதற்கிடையே நாட்டில் அமைதியை நிலைநாட்ட சிறப்பு குழு ஒன்றை நியமித்துள்ளதாக இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அதிபராக இருந்த கோட்டாபய ராஜபக்ச, மக்களின் கிளர்ச்சியையடுத்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இலங்கையில் இருந்து வெளியேறி மாலத்தீவுக்கும், பின்னர் சிங்கப்பூருக்கும் சென்ற கோட்டாபய, அங்கிருந்து தனது பதவி விலகல் கடிதத்தை நாடாளுமன்ற சபாநாயகருக்கு அனுப்பினார். இதைத்தொடர்ந்து, ரணில் விக்ரமசிங்க, இடைக்கால அதிபராக பதவியேற்றுக் கொண்டார்.

தொடர்ந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ரணில் விக்ரமசிங்க, மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் மாற்றத்திற்கான வழியை ஏற்படுத்திக்கொடுக்க, 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அமல்படுத்த தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்தார். போராடும் உரிமை அனைவருக்கும் உள்ளதாகவும், ஆனால் வன்முறையை அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

நாட்டில் அமைதியை நிலைநாட்ட, பாதுகாப்பு பதவிநிலை தலைமை அதிகாரி, காவல்துறை தலைவர், முப்படை தளபதிகளை உள்ளடக்கிய சிறப்புக்குழுவை நியமித்துள்ளதாகவும், வன்முறையாளர்களுக்கு எதிராக அரசியல் தலையீடு இன்றி நடவடிக்கை எடுக்க முழு அதிகாரமும் அக்குழுவுக்கு உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதற்கிடையே அதிபர் மாளிகை, பிரதமர் இல்லம், பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் இருந்து ஏற்கனவே போராட்டக்காரர்கள் வெளியேறிய நிலையில், இந்த மாளிகைகளில் ஏற்பட்டுள்ள சேதங்களை கணக்கிடும் பணிகள் தொடங்கியுள்ளன. இச்சூழலில், மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச ஆகியோர் இலங்கையைவிட்டு வெளியேற வரும் 28 ஆம் தேதி வரை தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருவரும் நாட்டை விட்டு தப்ப வாய்ப்புள்ளதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com