இலங்கை: கைது என பரவிய தகவல்... அரசின் போக்கிற்கு வலுக்கும் கண்டனம்

இலங்கை: கைது என பரவிய தகவல்... அரசின் போக்கிற்கு வலுக்கும் கண்டனம்
இலங்கை: கைது என பரவிய தகவல்... அரசின் போக்கிற்கு வலுக்கும் கண்டனம்

இலங்கையில் வரும் 18 -ம் தேதி முதல் ஐந்து நாட்களுக்கு பங்குச் சந்தையை மூட பங்கு பரிவர்த்தனை ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.

கொரோனாவால் சுற்றுலாத்துறை முடக்கம், பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால் இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாட்டால், மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்துகின்றனர்.

குறிப்பாக இலங்கை தலைநகர் கொழும்பில், அதிபர் மாளிகை அருகே கலிமுகத்திடலில் மக்கள் நடத்திவரும் தன்னெழுச்சிப் போராட்டத்திற்கு திரைப்பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஆதரவு தந்துவருகிறார்கள். அரசியல்கட்சிகள் அல்லாத மக்கள் ஒன்றிணைத்து நடத்திவரும் இந்தப் போராட்டத்திற்கு, நாடுதழுவிய அளவில் ஆதரவு அதிகரித்து வருகிறது.

மக்கள் அங்கேயே சமைத்து சாப்பிட்டு, அரசுக்கு எதிராக போராட்டத்தை தொடர்கிறார்கள். இந்தச்சூழலில் அந்த இடத்திற்கு அருகே ஏராளமான காலி டிரக்வண்டிகள் கொண்டுவரப்பட்டன. போராட்டக்காரர்கள் கைது செய்யப்படக்கூடும் என்று தகவல்கள் பரவியநிலையில், போராட்டக்காரர்களை அச்சுறுத்தும் அரசின் போக்குக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

போராட்டக்காரர்களை மிரட்ட நினைத்தால் கடும் பின்விளைவுகளை அரசு சந்திக்க நேரிடும் என்று இலங்கை வழக்கறிஞர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் குரல் எழுப்பியநிலையில், வாகனங்கள் அங்கிருந்து திரும்பின.

இதற்கிடையே, வரும் 18-ம் தேதியில் இருந்து ஐந்து நாட்களுக்கு, வர்த்தகத்தை நிறுத்தி வைக்குமாறு இலங்கை பங்கு பரிவர்த்தனை ஆணைக்குழு உத்தரவு பிறப்பித்துள்ளது. நாட்டின் பொருளாதார நிலையை கருத்தில்கொண்டு, பங்குதாரர்கள் விடுத்த வேண்டுகோளை பரிசீலித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பங்குப் பரிவர்த்தனை ஆணைக்குழு இயக்குநர் அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com