மீண்டும் கலவரப் பூமியான இலங்கை - மகிந்தாவை தொடர்ந்து அதிபர் கோட்டாபய தப்பியோட்டம்

மீண்டும் கலவரப் பூமியான இலங்கை - மகிந்தாவை தொடர்ந்து அதிபர் கோட்டாபய தப்பியோட்டம்
மீண்டும் கலவரப் பூமியான இலங்கை - மகிந்தாவை தொடர்ந்து அதிபர் கோட்டாபய தப்பியோட்டம்

இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்ச பதவி விலக வலியுறுத்தி கொழும்புவில் மாபெரும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், அவரது மாளிகையில் இருந்து அதிபர் கோட்டாபய தப்பியோடிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை, சாமான்ய மக்களை மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் பாதிக்கும் வகையில் கடும் விலையேற்றத்துடன் காணப்படுகிறது. இதையடுத்து ராஜபக்சே சகோதரர்கள் பதவி விலகக் கோரி தினந்தோறும் மக்கள் போராடி வருகின்றனர். இந்தப் போராட்டம் தீவிரமடைந்து கலவரமானதை அடுத்து கடந்த மே மாதம் 9-ம் தேதி பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகி, திரிகோணமலையில் தஞ்சமடைந்ததாக கூறப்பட்டது.

மகிந்த ராஜபச்கே வீடு உட்பட அவரது சகோதரர்களின் வீடு ம் போராட்டக்காரர்களால் தீக்கிரையாகின. இதன்பிறகு பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார். எனினும், அதிபர் கோட்டபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என மக்கள், கிரிக்கெட் பிரபலங்கள், எதிர்க்கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி கொழும்புவில் மாபெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆளும் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையடுத்து மாளிகையில் இருந்து இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சே தப்பியோடிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளனர். மேலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தடைகளை தாண்டி அதிபர் மாளிகை அருகே திரண்டுள்ளனர். அத்துடன் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கையில் 'கோ கோட்டா' என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி கொழும்பு நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.

‘முழுநாடும் கொழும்புக்கு’ என்ற தலைப்பில் தங்களது பகுதிகளில் இருந்து மக்கள் கொழும்பு நோக்கி பேரணியாக வருவதால் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அதிபர், பிரதமர் மற்றும் அவர்களின் அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன்காரணமாக கொழும்பு கோட்டை பகுதியில் காவல், அதிரடிப்படை மற்றும் ராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் கூட்டத்தை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். இதில் பொதுமக்கள் 33 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் இலங்கை மீண்டும் கலவரப்பூமியாக மாறியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com