இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனவின் உத்தரவை அடுத்து இலங்கை காவல்துறை தலைவர் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.
இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்கள் உட்பட 8 இடங்களில் நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பில் 359 பேர் கொல்லப்பட்டனர். படுகாயமடைந்த ஐநூறுக்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்தக் கொடூர தற்கொலைத் தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த 11 பேர் உட்பட வெளிநாட்டை சேர்ந்த 36 பேரும் உயிரிழந் துள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதில் 9 பேர் மனித வெடிகுண்டுகளாகப் பயன்படுத்தப் பட்டுள்ளனர். அவர்களின் பெயர் மற்றும் புகைப்படங்களை அந்நாட்டு காவல்துறை வெளியிட்டுள்ளது. அதில் மூன்று பெண் களும் இடம்பெற்றுள்ளனர்.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கத்தோலிக்க தேவாலயங்கள் மூடப்பட்டுள்ளன. பாதுகாப்புக் கருதி மசூதிகளுக்குச் சென்று தொழுகை நடத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள் ளது.
குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பாக 10 நாட்களுக்கு முன்பே தகவல்கள் கிடைத்தும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்காத து குறித்து இலங்கை மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வருகிறது.
இதனையடுத்து, இலங்கை ராணுவ செயலர், காவல்துறைத் தலைவர் ஆகியோரை ராஜினாமா செய்ய அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேன வலியுறுத்தினார். குண்டுவெடிப்பு தாக்குதலை முறியடிக்க தவறியதை அடுத்து அவர் இந்த நடவடிக் கையை முன் வைத்தார். அதிபர் சிறிசேனவின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து பாதுகாப்பு செயலர் ஹேமசிறி பெர்னாண்டோ தன்னுடைய பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் இலங்கை காவல்துறை தலைவர், புஜித் ஜெயசுந்தரா இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ‘’காவல்துறை தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். பாதுகாப்பு செயலாளருக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார். புதிய காவல்துறை தலைவர் விரைவில் நியமிக்கப்படுவார்’’ என்று அதிபர் சிறிசேன தெரிவித்துள்ளார்.