உலகம் வெப்பமயமாதலை நோக்கி சென்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் மக்கள் தங்களுடைய ஆற்றலை சேமிக்கும் வகையில் முக்கியமான பழக்கத்தை கைவிடுவது நல்லது என ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்ச்செஸ் கூறியிருக்கிறார்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று செய்தியாளர்களை சந்தித்த ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்ச்செஸ் கழுத்தில் Tie அணியாமல் வழக்கமான ஆடையுடன் முக்கியமான வேண்டுகோளை முன்வைத்துள்ளார், அதாவது, அனைத்து தனியார் மற்றும் அரசு ஊழியர்கள், அமைச்சர்கள் என பலரும் டை கட்டுவதை நிறுத்துங்கள் என அறைகூவல் விடுத்துள்ளார். ஏனெனில் டை கட்டுவதை நிறுத்தினால் ஆற்றலை சேமிக்க முடியும் எனக் கூறியுள்ளார்.
உக்ரைன் மீதான படையெடுப்புக்கு பிறகு அதனை குறைத்துக்கொள்ள வேண்டுமென்ற நோக்கில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உள்ளன. ஸ்பெயினும் தங்களுடைய எரிபொருள் தேவைக்கு ரஷ்யாவையே சார்ந்திருக்கிறது. அதனைக் குறைப்பதற்கான சிறிய முன்னெடுப்பாக டை கட்டுவதை நிறுத்தச் சொல்லியிருக்கிறார்.
இதனால் டை கட்டுவதற்கும், வெப்பமயமாதலுக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி எழலாம். ஏனெனில், டை கட்டுவதை தவிர்த்தால் குறைந்த செலவில் மக்களால் குளிர்ச்சியாக இருந்துக்கொள்ள முடியும். அதாவது அதிகளவில் குளிர்சாதனப் பெட்டிகளை பயன்படுத்துவதை தவிர்க்க முடியும் என்கிறார் சான்ச்செஸ்.
மேலும், ஐரோப்பிய நாடுகளில் கடுமையான வெப்ப அலை வீசிவருவதால் மின்சார பயன்பாடும் அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. ஆகவே மின்சாரத்தை சேமிப்பதில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகின்றோம்.
இது ஒன்றும் புதிதான நடைமுறையல்ல. ஜப்பானில் கடந்த 2011ம் ஆண்டே சூப்பர் கூல் biz என்ற பரப்புரை முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் கோடை காலத்தில் குளிர்ச்சியை கொடுக்கும் ஆடைகளை அணிய ஊக்குவிக்கப்படுகிறது. அதேபோல பிரிட்டன் நாடாளுமன்றத்திற்குள் உறுப்பினர்கள் தங்களது கோட்களை கழற்றி வைக்கலாம் என்றும் அண்மையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில்தான் ஸ்பெயினில் டை கட்டுவதை நிறுத்தும் வழக்கத்தை கொண்டு வர முயற்சித்திருப்பதாகவும், இதற்கான ஒப்புதல் ஆகஸ்ட் 1ஆம் வழங்கப்படலாம் எனவும் கூறப்பட்டிருக்கிறது.