தனி கேட்டலோனியா தொடர்பான போராட்டங்கள் வலுத்து வருவதை தொடர்ந்து, அந்தப் பிராந்தியத்தின் தன்னாட்சி அதிகாரத்தை பறிப்பது, அதன் தலைவர் கார்லஸ் பியூஜ்மோண்டை நீக்குவது உள்ளிட்ட முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக ஸ்பெயின் நாடாளுமன்றம் கூடவுள்ளது. இதனால் கேட்டலோனியா ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஸ்பெயினில் இருந்து தனி நாடாக பிரிந்து செல்வதற்காக கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி கேட்டலோனியாவில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அங்கு வசித்து வந்த 43 சதவிகிதம் பேர் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்ற நிலையில் தனி நாட்டுக்கு ஆதரவாக 90 சதவிகித வாக்குகள் பதிவானதாக கேட்டலோனியா தலைவர் கார்லஸ் பியூஜ்மோண்ட் அறிவித்தார். எனினும் இது சட்டவிரோதமாக நடத்தப்பட்ட வாக்கெடுப்பு எனக் கூறி அதை ஏற்க முடியாது என ஸ்பெயின் தெரிவித்தது.
இதனால் கேட்டலோனியா ஆதரவாளர்கள் ஆவேசமடைந்த நிலையில், ஸ்பெயின் அரசின் உத்தரவு தங்களை கட்டுப்படுத்தாது என தெரிவித்த கார்லஸ், கேட்டலோனியா விடுதலை பிரகடனத்தில் கையெழுத்திட்டார். எனினும் தனி நாடு தொடர்பான அறிவிப்பை மட்டும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துவிட்டு, ஸ்பெயின் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முன் வந்தார்.
குழப்பம் அடைந்த ஸ்பெயின் அரசு தனி நாடு தொடர்பான அறிவிப்பை கார்லஸ் வெளியிட்டாரா? இல்லையா? என்பதை விளக்குமாறு காலக்கெடு விதித்தது. மேலும் கேட்டலோனியாவுக்காக போராடிய முக்கிய தலைவர்கள் சிலரையும் கைது செய்தது. இதன் காரணமாக கேட்டலோனியா பகுதியில் மீண்டும் பதற்றமான சூழல் உருவானது.
இதைத் தெடர்ந்து தனி நாடாக கேட்டலோனியா பிரிந்து செல்வதை தடுக்கும் வகையில் ஸ்பெயின் அரசு அங்கு நேரடி ஆட்சியை அமல்படுத்தியது. மேலும் தனி நாடு அறிவிப்பு தொடர்பாக தனது நிலைப்பாட்டை பிராந்திய தலைவர் கார்லஸ் பியூஜ்மோண்ட் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. ஆனால் இதுவரை தனது நிலைப்பாட்டை கார்லஸ் தெரிவிக்கவில்லை. இதன் காரணமாக கார்லஸை பதவியில் இருந்து நீக்கவும், கேட்டலோனியாவில் உள்ள காவல்துறையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான அதிகாரத்தை பெறவும் ஸ்பெயின் நாடாளுமன்றம் கூடவுள்ளது. இதற்காக நடைபெறவுள்ள வாக்கெடுப்பில் அதிகப்படியான உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தால் கேட்டலோனியா விவகாரத்தில் பல அதிரடி மாற்றங்கள் ஏற்படலாம் என கூறப்படுகிறது.
குறிப்பாக கேட்டலோனியா பிராந்தியத்தில் புதிதாக தேர்தல் நடத்தப்படலாம் என்றும், அதன் கருவூலங்கள், அரசு அலுவலகங்கள், அரசு ஊடகங்கள் அனைத்தும் ஸ்பெயினின் கட்டுப்பாட்டுக்கு வந்து விடும் என்றும் தெரியவந்துள்ளது. இதனால் எதிர்க்கட்சிகளும் நிச்சயம் இதற்கு ஒப்புதல் வழங்குவார்கள் என்று ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோய் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதனால் அச்சம் அடைந்துள்ள கார்லஸ் பிராந்திய சட்டப்பேரவையை அவசரமாக கூட்டி முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது ஸ்பெயின் அரசின் திட்டங்களை முறியடிக்க உடனடியாக விடுதலையை பிரகடனம் செய்ய வேண்டும் என சில மூத்த தலைவர்களும், ஆதரவாளர்களும் கார்லஸிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஸ்பெயின் அரசின் நகர்வை பொறுத்து, கேட்டலோனியா தலைவர் கார்லஸ் அடுத்தக் கட்ட நடவடிக்கையை முன்னெடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.