சூரியனில் இருந்து வெளியேறிய சக்தி வாய்ந்த சூரிய புயல் ஒன்று விரைவில் பூமியை தாக்க உள்ளதாக தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிறுவனம் (National Oceanic and Atmospheric Administration - NOAA) எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த புயல் ரேடியோ பிளாக்அவுட்களை ஏற்படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்ததாக இருக்கக்கூடும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ரேடியோ பிளாக்அவுட்கள் என்பது சூரிய ஒளியிலிருந்து வெளியேறும் எக்ஸ்-கதிர்களின் வலுவான, திடீர் வெடிப்பு பூமியின் வளிமண்டலத்தைத் தாக்கும் போது, அதிக மற்றும் குறைந்த அதிர்வெண் ரேடியோ சிக்னல்களை நெரிசலாக்கும் நிகழ்வு ஆகும்.
இந்தப் புயல் ஜூலை 14 அன்று சூரியனின் மேற்பரப்பில் இருந்து வெடித்து பூமியை நோக்கி செலுத்தப்பட்டதாக NOAA கூறியுள்ளது. விண்வெளி வானிலை நிபுணர் டாக்டர் தமிதா ஸ்கோவ் சூரியனில் இருந்து வெளியேறிய இந்த சூரிய புயல் பற்றி ட்விட்டரில் தனது கருத்துகளைப் பதிவிட்டுள்ளார். “இந்த சூரிய புயலால் ஏற்படும் ரேடியோ பிளாக்அவுட்கள் பகல் வேளையில் ரேடியோ அலைகளின் செயல்பாடுகளை பாதிக்கக்கூடும். ஜிபிஎஸ் சேவையை பயன்படுத்துபவர்களுக்கு அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் இடையூறு ஏற்படக்கூடும். இந்த புயல் ஜிபிஎஸ் செயல்பாடுகளிலும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறிய விமானங்கள், கப்பல்களில் ஜிபிஎஸ் சேவையை பயன்படுத்துபவர்கள் கவனமாக இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.