ஒரு வேளை நத்தை கொண்டு வந்திருக்குமோ? - 27 ஆண்டுகளுக்கு பின் ட்விஸ்ட்டோடு வந்த லெட்டர்!

ஒரு வேளை நத்தை கொண்டு வந்திருக்குமோ? - 27 ஆண்டுகளுக்கு பின் ட்விஸ்ட்டோடு வந்த லெட்டர்!
ஒரு வேளை நத்தை கொண்டு வந்திருக்குமோ? - 27 ஆண்டுகளுக்கு பின் ட்விஸ்ட்டோடு வந்த லெட்டர்!

ஆர்யா நடிப்பில் வந்த சேட்டை படத்தில் ஒரு காமெடி காட்சி வரும். அதில், வீட்டு காலிங் பெல்லை அழுத்தும் போது வராத சத்தம் உள்ளே சென்று ரொம்ப நேரம் சந்தானம், பிரேம்ஜியிடம் ஆர்யா பேசும் போதுதான் அந்த மணி சத்தம் கேட்கும். அப்போது சந்தானம் “யாரோ வந்திருக்காங்க பாரு, போய் கதவை திற” என்பார். உடனே பிரேம்ஜி அவரிடம் சொல்வார், “நீ வந்தப்போ அடிச்ச காலிங் பெல்தான் அது” என.

இப்படி பல விதமான நிகழ்வுகள் பார்சல் டெலிவரி செய்யும் போதோ அல்லது இமெயில், எஸ்.எம்.எஸ் அனுப்பும் போதோ தாமதமாக சென்றடைவது உண்டு. ஆனால் 27 ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பிய கடிதம் ஒன்று இப்போ வந்து சேர்ந்திருக்கிறது. ஆனால் அதில் என்ன ட்விஸ்ட் என்றால் அந்த லெட்டர் யார் வசம் இருக்கிறது என்பதுதான்.

இந்த நிகழ்வு இங்கிலாந்தின் நார்தம்பெர்லேண்டில் உள்ள விலெம் பகுதியில்தான் அண்மையில் நடந்திருக்கிறது. லண்டனின் Hexham Courant செய்தி தளத்தின்படி ஜான் ரெயின்போ என்ற 60 வயது முதியவருக்கு கடந்த ஜனவரி 13ம் தேதி அந்த 27 ஆண்டுகால பழைய லெட்டர் கிடைத்திருக்கிறது.

தனது வீட்டின் போஸ்ட் பாக்ஸில் இந்த கடிதம் இருந்ததை கண்டு ஜான் ரெயின்போ ஆச்சர்யப்பட்டிருக்கிறார். ஏனெனில் அந்த லெட்டரில் 1995ம் ஆண்டு போடப்பட்ட ஸ்டாம்ப் அச்சு இருந்திருக்கிறது. அதனை பார்த்ததும் இதே வீட்டில் இதற்கு முன்பு 10 - 15 ஆண்டுகள் வசித்திருந்தவர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதமாக இருக்கும் என யூகித்த ஜான், அதனை பிரித்து பார்த்த போது சற்று படிந்த கறைகளோடு இருந்திருக்கிறது.

அதில், 1995ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி இங்கிலாந்தின் சோமெர்செட்டில் உள்ள பிரிட்ஜ்வாட்டர் பகுதியில் இருந்து அனுப்பப்பட்ட கடிதம் என்பது தெரிய வந்திருக்கிறது. இது குறித்து பேசியிருக்கும் ஜான் ரெயின்போ, “இது பழைய கடிதமாக இருந்தாலும் சரியான நிலையில்தான் இருக்கிறது. இதை பார்த்தால் இத்தனை ஆண்டுகளாக வெவ்வேறு இடங்களுக்கு சென்றது போலவே இருக்கவில்லை. ஆனால் என்ன ஆச்சர்யமான விஷயமென்றால் எங்களுக்கும் இந்த கடிதத்திற்கு உரியவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.” எனக் கூறியிருக்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், “நானும் என் மனைவியும் இந்த வீட்டிற்கு கடந்த 2015ம் ஆண்டுதான் குடிபெயர்ந்தோம். 2010ம் ஆண்டு வரை இதே வீட்டில் குடியிருந்த வலேரி ஜார்விஸ் என்ற பெண்ணுக்குதான் இந்த கடிதம் வந்திருக்கிறது. இங்கு இருந்த வரை அந்த பெண் முதியவராக இருந்திருப்பார். ஒருவேளை இறந்திருக்கலாம். ஆனால் லெட்டரை அனுப்பியர்களுக்கு அது கடைசியாக வந்துவிட்டது என்பதை அறிந்துகொள்வது நன்றாக இருக்கும்.” என ஜான் தெரிவித்திருக்கிறார்.

கடிதம் அனுப்பப்பட்ட நிறுவனமான ராயல் மெயிலின் செய்தி தொடர்பாளர் இது பற்றி பேசிய போது, “இது மாதிரியான நிகழ்வுகள் எப்போதாவதுதான் நடக்கும். ஆனால் இந்த கடிதம் தாமதமானதற்கு என்ன காரணம் என சரியாக தெரியவில்லை” என்றிருக்கிறார். முன்னதாக வலேரி ஜார்விஸின் கணவர் முதல் உலகப் போரில் ஈடுபட்டிருந்தவர் என ஜானின் அண்டைவீட்டார் டீனா ராபின்ஸன் கூறியிருக்கிறார்.

அதன்படி 1880ம் ஆண்டு காலத்தில் இருந்து வலேரியின் குடும்பத்தினர் விலெமில் உள்ள அந்த வீட்டில் வசித்து வந்திருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com