கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மீறுவோர் சுடப்படுவார்கள் என பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தொலைக்காட்சி வழியாக மக்களுக்கு உரையாடிய அதிபர் ரொட்ரிகோ டுடெர்டே , கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டார். மேலும், ஊரடங்கு காலத்தில், விதிமுறைகளை கடைபிடிக்காமல் ஒன்று கூடுவோரையும், வைரஸ் பரவலுக்கு காரணமாக இருப்போரையும் சுட்டுத் தள்ள காவல்துறை மற்றும் ராணுவத்திற்கு அனுமதி வழங்கியுள்ளதாக குறிப்பிட்டார்.
மணிலா பகுதியில் உள்ள மக்கள், உணவுக்கான மானியம் வழங்க வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், காவல்துறை மற்றும் மருத்துவ பணியாளர்களிடம் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டதாகவும் கூறப்பட்டுகிறது.
இதன் விளைவாகவே, பிலிப்பைன்ஸ் அதிபர் கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொரோனா தாக்கத்தால் பிலிப்பைன்ஸில், 90ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 2 ஆயிரத்து 300 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.