Ships stranded near Hormuz
Ships stranded near Hormuz X

ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க கட்டணம்: ஈரான் அதிரடி.. ஏன் தெரியுமா?

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரும் கோரிக்கைகளில் ஹார்முஸ் நீர்வழிப் பாதை வழியாக எண்ணெய் தடையின்றி கொண்டு செல்லப்படுவது முக்கியமான ஒன்றாகும்.
Published on

40 நாள் மோதலுக்குப் பின் அமெரிக்கா–ஈரான் 2 வார கால தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதால், ஹார்முஸ் ஜலசந்தி நிபந்தனைகளுடன் மீண்டும் திறக்கப்பட்டது. போருக்குப் பிந்தைய புனரமைப்புக்காக, கப்பல்களின் வகை, சரக்கு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு ஈரான், ஓமன் கட்டணம் வசூலிக்க திட்டமிட்டுள்ளன.

40 நாள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், அமெரிக்காவும் ஈரானும் இன்று அதிகாலையில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன. பிப்ரவரி 28 அன்று போர் தொடங்கியதிலிருந்து மூடப்பட்டிருந்த  ஹார்முஸ் நீர்வழியை நிபந்தனைகளுடன் மீண்டும் திறக்க ஈரான் ஒப்புக்கொண்டது.

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களின் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. மரைன்ட்ராஃபிக் வழங்கிய தரவுகளின்படி, 426 டேங்கர்கள், 34 எல்பிஜி கேரியர்கள் மற்றும் 19 எல்என்ஜி கப்பல்கள் உட்பட நூற்றுக்கணக்கான கப்பல்கள் இன்னும் அப்பகுதியில் உள்ளன.

The Strait of Hormuz
The Strait of Hormuz file photo

போரை முடிவுக்குக் கொண்டுவரும் கோரிக்கைகளில் ஹார்முஸ் நீர்வழிப்பாதை வழியாக எண்ணெய் தடையின்றி கொண்டு செல்லப்படுவது முக்கியமான ஒன்றாகும். ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்கள் மீது ஈரான் மற்றும் ஓமன் ஆகிய இரு நாடுகளும் போக்குவரத்து கட்டணம் வசூலிக்க அனுமதிக்கும் ஒரு விதிமுறையும் இடம்பெற்றுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்களுக்குக் கட்டணம் கோர தெஹ்ரானை அனுமதிக்க வேண்டும் என ஈரான் விரும்புவதாக ஒரு மூத்த ஈரானிய அதிகாரி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். கப்பலின் வகை, அதன் சரக்கு மற்றும் பிற சூழ்நிலைகளைப் பொறுத்து கட்டணம் மாறுபடும் என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

ஏபி செய்தி நிறுவனத்தின்படி, ஈரான் அதிகாரிகள், இந்த மோதல் நாட்டின் பாதுகாப்பு, நிர்வாக மற்றும் குடிமை உள்கட்டமைப்புகளுக்குப் பரவலான அழிவை ஏற்படுத்தியுள்ளதால், போருக்குப் பிந்தைய புனரமைப்புக்காக ஈரான் இந்த நிதியைப் பயன்படுத்தும் என்று கூறினர்.

கப்பல்கள் ஜலசந்தியைக் கடந்துசெல்ல அனுமதிகளையும் உரிமங்களையும் பெறுவதைக் கட்டாயமாக்கும் ஒரு நெறிமுறையை ஓமனுடன் இணைந்து தெஹ்ரான் உருவாக்கி வருவதாகவும், இது போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவதைவிட எளிதாக்கும் நோக்கத்தைக் கொண்டது என்றும் ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் காசெம் கரிபாப்தி கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

Hormuz
Hormuz web

சுமுகமான போக்குவரத்தை உறுதி செய்வதற்கான வழிகள் குறித்து ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக ஓமன் கூறியது, ஆனால் ஏதேனும் ஒப்பந்தங்கள் எட்டப்பட்டதா என்பதை ஓமன் குறிப்பிடவில்லை.

ஈரானுக்கும் ஓமனுக்கும் இடையில் வெறும் 34 கி.மீ (21 மைல்கள்) அகலம் கொண்ட இந்த நீர்ப்பரப்பு, வளைகுடாவிலிருந்து இந்தியப் பெருங்கடலுக்குச் செல்லும் பாதையை வழங்குகிறது. மேலும், உலகின் எண்ணெய் விநியோகத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கிற்கும், உரங்கள் உள்ளிட்ட பிற அத்தியாவசியப் பொருட்களுக்கும் இதுவே பிரதான பாதையாகும் இது ஒரு சர்வதேச நீர்வழியாகக் கருதப்பட்டு வந்ததால், கடந்த காலத்தில் இவ்விரு நாடுகளும் இதற்கு எந்த சுங்க வரியும் விதிக்கவில்லை.

நீர்வழிப்பாதையைக் கடக்க கட்டணம் வசூலிப்பது குறித்து சர்வதேச கடல் சட்டம் என்ன சொல்கிறது என்றால், நீரிணைகளை ஒட்டியுள்ள நாடுகள், அவ்வழியே கடந்து செல்ல அனுமதி பெறுவதற்காக மட்டும் கட்டணம் கோர முடியாது.

இருப்பினும், கப்பல்களை வழிநடத்துதல், இழுத்துச் செல்லுதல் அல்லது துறைமுகச் சேவைகள் போன்ற குறிப்பிட்ட சேவைகளுக்காக, அவை கப்பல்கள் மீது வரையறுக்கப்பட்ட கட்டணங்களை விதிக்கலாம். ஆனால், எந்தவொரு குறிப்பிட்ட நாட்டிலிருந்தும் வரும் கப்பல்கள் மீது இந்தக் கட்டணங்கள் அதிகமாக விதிக்கப்படக்கூடாது என்று கூறுகிறது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com