கப்பல் தாக்குதல்கள், சிறைபிடிப்புகள்.. தீவிரமடையும் அமெரிக்கா - ஈரான் மோதல்!
உலகின் 20% கச்சா எண்ணெய் போக்குவரத்து நடந்துவரும் ஹார்முஸ் வழித்தடத்தில், அமெரிக்கா-ஈரான் இடையே கப்பல் தாக்குதல், சிறைபிடிப்பு, துப்பாக்கிச் சூடு என யாரின் கட்டுப்பாடு அதிகம் இருக்கிறது என்ற போட்டி நிலவுகிறது. இதனால் உலகளாவிய எண்ணெய் வர்த்தகம், போக்குவரத்து பாதுகாப்பு ஆகியவை கடுமையாக அச்சுறுத்தப்படுகிறது.
மேற்கு ஆசியாவில் நிலவும் ஈரான் - அமெரிக்கா இடையேயான இராணுவ மோதல், பெரும் அபாயங்களைக் கொண்ட ஒரு கடல்வழிப் போராக உருவெடுத்து வருகிறது. உலகின் 20 சதவிகிதம் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் ஹார்முஸ் நீரிணையில், அமெரிக்காவும் ஈரானும் தங்கள் கட்டுப்பாட்டை நிலைநாட்டும் போட்டியில் கப்பல்களைக் குறிவைத்து, கைப்பற்றி அச்சுறுத்தி வருகின்றன. கப்பல் தாக்குதல்கள், சிறைபிடிப்புகள் மூலம் உலகளாவிய எண்ணெய் வழித்தடத்தை இந்த போர் சீர்குலைத்து வருகிறது.
ஹார்முஸ் நீர்வழிப்பாதையில் அமெரிக்கா கடற்படை முற்றுகையிட்டதைத் தொடர்ந்து, போரின் ஆரம்ப நாட்களிலிருந்தே போக்குவரத்தைக் கட்டுப்படுத்தி வந்த ஈரான், தனது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. சமீபத்தில் புதன்கிழமையன்று (நேற்று) அந்த நீர்வழிப்பாதையைக் கடந்துசென்ற 3 கப்பல்கள் மீது ஈரானியப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அவற்றில் இரண்டைக் கைப்பற்றியதாகவும் கூறப்படுகிறது.
ஏப்ரல் 22 அன்று, ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC), இரண்டு கொள்கலன் கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர் அவற்றைக் கைப்பற்றியது. யூஃபோரியா (Euphoria) என்ற மூன்றாவது கப்பல் துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளாகி, அதன் பாதையிலிருந்து விலகிச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கைப்பற்றப்பட்ட கப்பல்களில் ஒன்று இந்தியாவிற்குச் சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
கப்பல்கள் தங்களின் கண்காணிப்பு அமைப்புகளை அணைத்துவிட்டு, ரகசியமாகப் பயணிக்க முயன்றதாகக் குற்றம் சாட்டி, ஈரானிய அதிகாரிகள் இந்த கப்பல்களை சிறைபிடித்ததாக கூறியுள்ளனர்.
அதே நாளில், அமெரிக்காவும் தனது கடல்சார் நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியது. ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை முடக்கும் நோக்கத்தில் அமெரிக்கப் படைகள் ஆசியக் கடற்பரப்பில் குறைந்தது மூன்று ஈரானிய எண்ணெய்க் கப்பல்களை இடைமறித்து, அவற்றை வேறு திசைக்குத் திருப்பின.
அமெரிக்க மத்திய கட்டளை மையத்தின் சமீபத்திய தகவலின்படி, முற்றுகையை அமல்படுத்தியதிலிருந்து, அமெரிக்கப் படைகள் குறைந்தது 29 கப்பல்களைத் திரும்பிச் செல்லவோ அல்லது துறைமுகத்திற்கே திரும்பவோ உத்தரவிட்டுள்ளன.
ஈரான் தரப்பில், ஏப்ரல் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடந்த முந்தைய சம்பவங்களில், இந்தியாவுடன் தொடர்புடைய கப்பல்கள் உட்பட பல எண்ணெய்க் கப்பல்கள் மீது ஈரானியப் பீரங்கிப் படகுகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதால், அவற்றில் பல கப்பல்கள் தங்கள் பயணத்தை பாதியிலேயே கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நீர்வழிப்பாதை திறந்தே இருக்கும் என்று ஈரானியத் தலைவர்கள் கூறிய பின்னரே இந்தக் கப்பல்கள் கடக்க முயன்றன. இருப்பினும், சில மணி நேரங்களிலேயே ஈரானியப் படைகளால் அந்தப் பாதை மூடப்பட்டது.
பிப்ரவரி 28 முதல் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது திடீர் தாக்குதல் நடத்தி மோதலைத் தொடங்கியதிலிருந்து, இப்பகுதியில் ஒட்டுமொத்தமாக 30க்கும் மேற்பட்ட கடல்சார் தாக்குதல்கள் பதிவாகியுள்ளன.

