தமிழகத்தில் இருந்து கடல் வழியாக கடத்தி செல்லப்பட்ட பல லட்சம் மதிப்பிலான கஞ்சாவை மன்னார் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இலங்கை தலைமன்னார் மாவட்டம் ஓலைத்தொடுவாய் கடற்கரை பகுதிக்கு அருகாமையில் உள்ள காட்டுப்பகுதியில் தமிழகத்தில் இருந்து கடல் மார்க்கமாக கடத்தி வரப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த கேரள கஞ்சா மூட்டைகள் இன்று காலை மன்னார் போலீசாரால் மீட்கப்பட்டது.
இலங்கை கடற்படையினர் கொடுத்த ரகசிய தகவலின் அடிப்படையில், மன்னார் மாவட்ட போலீஸ் உயர் அதிகாரி பந்துல வீரசிங்கவின் உத்தரவின் பெயரில், போதை பொருள் தடுப்பு பிரிவு மற்றும் மன்னார் காவல்நிலைய போலீஸ் குழுவினர் இன்று அதிகாலை ஓலைத்தொடுவாய் கடற்கரை பகுதிக்கு அருகே உள்ள காட்டுப்பகுதியில் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு மண்ணுக்கு அடியில் இரண்டு சாக்கு மூட்டைகளில் 94 கஞ்சா பண்டல்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்து தெரியவந்தது இதையடுத்து போலீசார் அதனை சோதனை செய்ததில் 200 கிலோ 825 கிராம் எடை கொண்ட கேரள கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அதை கைப்பற்றிய போலீசார் காவல்நிலையத்திற்கு எடுத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.