\
scientists weigh in alien life
AlienReuters

வேற்றுக்கிரகவாசிகள் உயிருடன் இருக்கின்றனவா? Secret-ஐ உடைத்த விஞ்ஞானிகள்!

K2-18b மற்றும் செவ்வாய்க் கிரகத்தில் உயிரினங்களுக்கான தடயங்கள் கிடைத்தாலும், வேற்றுக்கிரக உயிர்கள் இருப்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Published on

செய்தியாளர் : ஐடா அருட்செல்வி

வேற்றுக்கிரகவாசிகள் இருப்பதற்கான ஆதாரம் கிடைத்துவிட்டதா என்ற கேள்வி சமீபகாலமாக அதிகமாக எழுப்பப்படுகிறது. 2025-ஆம் ஆண்டு, பூமிக்கு வெளியே உயிர்கள் இருப்பதற்கான மிக வலுவான அறிகுறிகள் கிடைத்துள்ளதாக செய்திகள் வெளியாகின. குறிப்பாக, K2-18b என்ற வேற்றுக்கிரகத்தில் உயிர்கள் இருக்கலாம் என்ற தகவல் கவனம் பெற்றது. அதேபோல், செவ்வாய்க் கிரகத்தில் NASA-வின் Perseverance ரோவர் ஆய்வு செய்த ‘Cheyava Falls‘ என்ற பாறையிலும், உயிரினங்களின் செயல்பாட்டுடன் தொடர்புடையதாக இருக்கக்கூடிய சில அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக NASA தெரிவித்தது.

ஆனால், பெரும்பாலான விஞ்ஞானிகள் இதை எப்படிப் பார்க்கிறார்கள்? இந்தக் கேள்விக்குப் பதில் தெரிந்துகொள்ள உலகம் முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான வானியல் மற்றும் வேற்றுக்கிரக உயிரியல் ஆராய்ச்சியாளர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.

K2-18b தொடர்பான ஆய்வில், வெறும் 6.6% விஞ்ஞானிகள் மட்டுமே வேற்றுக்கிரக உயிர்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம் என்று ஒப்புக்கொண்டனர். சுமார் மூன்றில் இரண்டு பங்கு விஞ்ஞானிகள் இதை ஏற்கவில்லை. 28% பேர் எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை.

Alien
AlienReuters

செவ்வாயின் பாறையில் செய்யப்பட்ட ஆய்வில் நம்பிக்கை சற்று அதிகமாக இருந்தது. 15.1% பேர் உயிரினங்களின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்தனர். 44.6% பேர் இதை ஏற்கவில்லை. 40.3% பேர் நடுநிலையாக இருந்தனர்.

இதிலிருந்து ஒரு முக்கியமான விஷயம் தெரிகிறது. விஞ்ஞானிகளின் கருத்து வெறுமனே “ஆம்” அல்லது “இல்லை” என்று இரண்டாகப் பிரிந்துவிடவில்லை. ஆதாரங்கள் போதுமானதாக இல்லை என்று பலர் கருதுகின்றனர்.

K2-18b தொடர்பான தகவல்கள் பூமியில் இருந்து மிகத் தொலைவில் உள்ள ஒரு கிரகத்தின் வளிமண்டலத்தை ஆய்வு செய்ததன் அடிப்படையில் கிடைத்தவை. ஆனால், செவ்வாய் பாறையை நேரடியாக ஆய்வு செய்ய முடிகிறது. அதனால் இரு ஆய்வுகளுக்கும் இடையே முக்கியமான வேறுபாடு உள்ளது.

உயிரினங்கள் உருவாக்கக்கூடிய சில அடையாளங்கள், இயற்கையான உயிரற்ற செயல்முறைகளாலும் உருவாகலாம் என்பதையும் விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Alien
AlienReuters

இதனால், “வேற்றுக்கிரக உயிர்கள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டன” என்று உறுதியாகக் கூறும் நிலைக்கு விஞ்ஞானிகள் இன்னும் வரவில்லை. புதிய ஆதாரங்கள் கிடைக்கும் வரை, இந்த விவகாரத்தில் எச்சரிக்கையுடன் முடிவெடுக்க வேண்டும் என்பதே பெரும்பாலான விஞ்ஞானிகளின் நிலைப்பாடாக உள்ளது.

இதன்மூலம், அறிவியல் என்பது எப்போதும் 100 சதவீதம் உறுதியான “ஆம்” அல்லது “இல்லை” என்ற பதில்களைக் கொண்டது அல்ல என்பதும் தெரியவருகிறது. புதிய ஆதாரங்கள் கிடைக்கும்போது விஞ்ஞானிகளின் கருத்துகளும் மாறக்கூடும்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com