சவுதி அரேபியாவில் காரை தொடர்ந்து பெண்கள் மோட்டார் சைக்கிளும் ஓட்டலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் கடந்த 26 ஆண்டுகளாக பெண்கள் கார் ஓட்ட தடை இருந்தது. நீண்ட கால கோரிக்கையை ஏற்று பெண்கள் கார் ஓட்ட விதித்திருந்த தடையை சவுதிஅரேபிய அரசு நீக்கியது. வருகிற 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பெண்கள் கார் ஓட்ட அனுமதி அளித்து, கடந்த செப்டம்பர் மாதம் மன்னர் முகம்மது பின் சல்மான் உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில், காரை தொடர்ந்து மோட்டார் சைக்கிள், லாரிகள் ஓட்டவும் பெண்களுக்கு தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை சவுதி அரேபியா நாட்டின் போக்குவரத்து துறை இயக்குனர் ஜெனரல் நேற்று வெளியிட்டார். ஓட்டுனர் உரிமம் இருபாலருக்கும் பொருந்தும் என்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் மோட்டார் சைக்கிள், லாரிகள் ஓட்டவும் பெண்களுக்கு உரிமம் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெண்கள் ஓட்டும் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகள் வேறு விதமாக இருக்காது. போக்குவரத்து விதிகளை மீறும் பெண்கள் மற்றும் விபத்துகளை ஏற்படுத்தும் பெண் ஓட்டுநர்களை தண்டிப்பதற்கும், அபராதம் விதிப்பதற்கும் பெண்களால் நிர்வகிக்கப்படும் தனி அமைப்பு உருவாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.