சவூதி அரேபியாவில் வரும் ஜுலை 1 ஆம் தேதி முதல் குடும்ப வரி அமல்படுத்தப்பட உள்ளதால் இந்தியர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
வெளிநாடுகளிலிருந்து பலர் சவூதியில் தங்கி வேலை செய்து வருகின்றனர். அதன்படி, சவூதி அரேபியாவில் தற்போது சுமார் 41 லட்சம் இந்தியர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர். வெளிநாடுகளிலிருந்து சவூதிக்கு வேலைக்கு செல்லும் சிலர். அங்கு சென்ற சில நாட்களில் தங்களது மனைவி, குழந்தைகளை தங்களுடன் தங்க அழைத்து கொள்வர்.
இந்நிலையில், சவூதி அரேபியாவில், தற்போது புதிதாக குடும்ப வரி விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மனைவியுடன் தங்கியிருந்தால் மாதத்திற்கு 100 ரியால் (1700 ரூபாய்) வரி கட்ட வேண்டும். மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் தங்கியிருந்தால் மாதத்திற்கு 300 ரியால் (5,100 ரூபாய்), வருடத்திற்கு 3600 ரியால் (62,000 ரூபாய்) வரிசெலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வரி வரும் 2020 ஆம் ஆண்டு வரை ஆண்டுக்கு ஒரு முறை 100 ரியால் உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சவூதியில் தங்கி வேலை செய்பவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அரசின் இந்த அறிவிப்பால், மனைவி மற்றும் குழந்தைகளை தங்களுடன் தங்க வைத்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. குடும்பத்தினரை சொந்த ஊர்களுக்கே திருப்பி அனுப்பிவிட்டு, மீண்டும் பேச்சுலர் வாழ்க்கை நிலை ஏற்பட்டுள்ளதாக அங்குள்ளவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.