’கொன்று விடுவார்கள்’ என்று கதறிய சவுதி பெண்ணுக்கு கனடா அடைக்கலம்!
தாய்லாந்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த, சவுதி அரேபியா இளம்பெண்ணுக்கு கனடா நாடு அடைக்கலம் கொடுத்ததை அடுத்து அவர் அங்கு சென்று சேர்ந்தார்.
சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர், ரஹஃப் முகமது அல்குனம் (Rahaf Mohammed al-Qunun). வயது 18. குடும்பத்தினர் இவருக்கு திருமண ஏற்பாடு செய்தார்கள். மறுத்தார் ரஹஃப். இதனால் அவரை அறைக்குள் அடைத்து வைத்து சித்ரவதை செய்தார்களாம். தலைமுடியை வெட்டி, அடித்து துன்புறுத்தியுள்ளனர். வீட்டில் இருந்து தப்பிக்க சரியான நேரம் பார்த்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் குடும்பத்துடன் குவைத் சென்றிருந்த அவர், அங்கிருந்து தப்பி, ஆஸ்திரேலியா செல்ல முயன்றார். முதலில் தாய்லாந்து சென்று அங்கிருந்து ஆஸ்திரேலியா செல்ல அவர் முடிவு செய்திருந்தார்.
ஆனால், பாஸ்போர்ட்டை பரிசோதித்த குவைத் குடியுரிமை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பெற்றோர் அனுமதி இல்லாமல், வெளிநாடு அனுப்ப மறுத்துவிட்டனர். இதுகுறித்து ஐ.நா.மனித உரிமை கண்கணிப்பு ஆணையத்துக்கு ரஹஃப், ட்விட்டரில் தகவல் தெரிவித்தார். பின்னர் எப்படியோ சமாளித்து விமானத்துக்குள் ஏறிவிட்டார்.
விமானம் தாய்லாந்து வந்தது. பாஸ்போர்ட்டை சோதித்த குடியுரிமை அதிகாரிகள், ஆஸ்திரேலியாவில் தங்குவதற்கான விசா உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாததை அடுத்து அவரை அனுப்ப மறுத்தனர். சவுதி தூதரகத்திடம் இதுபற்றி கூறினர்.
ரஹஃப் வீட்டில் இருந்து தப்பி வந்ததும் ஆஸ்திரேலியாவில் அகதியாக தஞ்சம் கோர இருப்பதும் அப்போதுதான் அவர்களுக்குத் தெரியவந்தது. ஆனால், அவரை ஆஸ்திரேலியா அனுப்ப தாய்லாந்து இமிகிரேஷன் அதிகாரிகள் மறுத்து விட்டனர். சவுதிக்கு திரும்ப அனுப்பப் போகிறோம் என்றனர்.
இதை ஏற்க மறுத்த ரஹஃப், ’’நான் இஸ்லாம் மதத்தை துறந்துவிட்டேன். சவுதி சென்றதும் என்னை சிறையில் அடைப்பார்கள். வெளியே வந்ததும் கொன்று விடுவார்கள்’’ என்று கதறினார். ’’நூறு சதவிகிதம், என்னை அவர்கள் கொல்வது உறுதி, தயவு செய்து என்னை அங்கு அனுப்பாதீர்கள்’’ என்று கண்ணீர் விட்டார். இருந்தும் தாய்லாந்து அதிகாரிகள் அவரை சவுதிக்கு நாடு கடத்தும் முடிவில் உறுதியாக இருந்தனர். இதுபற்றி மனித உரிமை கண்காணிப்பு அமைப்புக்கு ரஹப், உருக்கமாக ட்விட் செய்தார்.
இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் ஆணையத்திடம் தாய்லாந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள், ரஹஃப்பை ஏற்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து அவரை நாடு கடத்தும் முடிவை தாய்லாந்து அதிகாரிகள் கைவிட்டனர். அவரை ஓட்டல் ஒன்றில் தற்காலிகமாகத் தங்கவைத்தனர்.
இதற்கிடையே, சவுதியில் இருந்து ரஹஃபின் தந்தையும் சகோதரரும் தாய்லாந்து வந்தனர். அவர்களை சந்திக்க ரஹஃப் மறுத்துவிட்டார். அவர்கள் கொன்றுவிடுவார்கள் என்றும் பயந்தார். இந்நிலையில் ஐ.நா மனித உரிமை அமைப்பின் மூலம் அவருக்கு அடைக்கலம் கொடுக்க சில நாடுகளில் பேசப்பட்டது.
இதையடுத்து கனடா பிரதமர், அவரை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார். அதன்படி, தாய்லாந் தில் இருந்து கனடா புறப்பட்ட அவர், டொரன்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத் துக்கு நேற்று காலை வந்தார். விமான நிலையத்தில், கனடா வெளியுறவுத் துறை அமைச்சர், கிறிஸ்டியா ஃபிரீலேண்ட் அவரை வரவேற்று, ‘’தைரியமான புதிய கனடா பெண்’’ என்று மீடியாவிடம் அறிமுகப்படுத்தினார். அவர்களிடம் பேசிய ரஹஃப், அது தொடர்பான புகைப்படங்களை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.